மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு 09-07-2023 அன்று அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணம் விண்வெளித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
இந்தியா தமது விண்வெளிப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு நீண்ட காலத்திற்கு முன்பே விண்வெளி பயணத்தைத் தொடங்கிய நாடுகள் தற்போது இந்தியாவைப் பார்த்து ஆச்சரியம் அடைவதுடன் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நமது விண்வெளி நிபுணத்துவம் பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறினார். சந்திரயான் -3 என்பது சந்திரயான் -2 விண்கலத்தின் தொடர்ச்சி என்று அவர் குறிப்பிட்டார். நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் அது பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ரோவரில் உள்ள பல கேமராக்களின் உதவியுடன், படங்களைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

