ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ள ஐந்து அணிகளை இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தேர்வுசெய்துள்ளார்.
இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தனது 51-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
ரெவ்ஸ்போர்ட்ஸ் இணையத்தளத்துக்கு பேட்டி அளித்த அவர், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை அக்டோபர் 15-ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த நிலையில் உலகக் கோப்பை அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ள அணிகளை கங்குலி தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.”உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் நியூசிலாந்தைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஐந்தாவது அணியாக பாகிஸ்தான் அணியையும் நான் தேர்வு செய்கிறேன்.” என்றார்.
இரண்டாவது அரை இறுதி ஆட்டம் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. மற்றொரு அரை இறுதி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “பாகிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறினால் நன்றாக இருக்கும். அப்போது தான் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தைப் பார்க்க முடியும்.” என்றார்.
தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டிகளின் முக்கிய ஆட்டங்களில் இந்தியா தோல்விடைந்து வருகிறது. சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கங்குலி, “உலக சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு இந்தியா நுழைந்ததே ஒரு சாதனை தான். கடந்த காலங்களில் முக்கிய ஆட்டங்களில் இந்தியா சரியாக விளையாடவில்லை என்பது உண்மை. ஆனால், இந்த முறை ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி சாதிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

