தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் தொடக்க கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலிபணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. இந்த காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (06.06.2023) தொடங்கியது.
விண்ணப்ப பதிவு மேற்கொள்வதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 5- ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு விண்ணப்பிக்க முடியாது. முழுமையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்ப பதிவை http://www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடக்க உள்ளது. தேர்வர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.சிஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.300 செலுத்தினால் போதும்.
தேர்வை பொறுத்தவரையில் தமிழில் தகுதி தேர்வாக 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வாக 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்க இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு 110 மதிப்பெண் (Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Biology, History, Geography – Degree standard level) பொது அறிவுக்கு 10 மதிப்பெண், எஜூக்கேஷனல் மெத்தடாலஜி பகுதியில் இருந்து 20 மதிப்பெண் என்று ஒதுக்கப்படும். (தேர்வு பாடத்திட்டத்தை https://www.trb.tn.gov.in/ என்ற இணையத்தில் பார்க்கலாம்)

இதில் தமிழ் தகுதித் தாள் தேர்வில் 20 மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும். தேர்வுக்கான பாடங்கள் குறித்த விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். பட்டப்படிப்புடன் ஆசிரியர் தேர்வில் (B.Ed) வெற்றி பெற்றிருக்க வேண்டும்.


