தமிழக சட்டசபையில் 2022 -ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி, தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140, கோவை மாநகராட்சியில் 50, மதுரை மாநகராட்சியில் 46, திருச்சி மாநகராட்சியில் 25, சேலம் மாநகராட்சியில் 25, திருப்பூர் மாநகராட்சியில் 25 மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 189 என மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, மக்கள் பயன்பாட்டுக்காக ஜூன் 6 ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் இன்று மாலையில் நேரடியாகத் திறந்து வைக்கிறார். மற்ற 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைக்க உள்ளார்.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோர் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி, 34- கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாநகராட்சி 34- வது கோட்டத்தில் ஜோதி டாக்கீஸ் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை இன்று 06-06-2023 மாலை 05 மணிக்கு நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தனது திருக்கரங்களால் காணொலி காட்சி நிகழ்வு மூலம் துவக்க உள்ளார்கள்.
காலை, மாலை நேரங்களில் நமது 34- வது கோட்ட மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வசதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், தாய்- சேய் நல சேவைகளான கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகள், தாய் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகள், சிறுகுறு நோய்களுக்கான சிகிச்சைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளும் வழங்கப்படவுள்ளது.

இந்த மையத்தில் ஒரு மருத்துவர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். நம் கோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக இந்த மக்கள் நலவாழ்வு மையம், காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையம் செயல்படும்.
இதனால், நம்கோட்டத்தில் வசிக்கும் மக்கள், இந்த மையத்துக்கு மாலை நேரங்களிலும்சென்று மருத்துவம் பார்த்து கொள்ளலாம். இத்தகைய சிறப்புமிகு நகர்புற நலவாழ்வு மையத்தை 34- கோட்டத்தில் துவங்க உத்தரவிட்ட நமது ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்களுக்கும், மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களுக்கும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ அவர்களுக்கும், வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேயர் அண்ணன் ஆ.இராமச்சந்திரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்’’ என்று கூறியுள்ளார்.

