காயம் காரமாக ஓய்வில் இருந்த அஜிங்கியா ரஹானே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ள அஜிங்கியா ரஹானே, பிசிசி டிவியிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஜுன் 7 ஆம் தேதி தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதற்காக ஐபிஎல் 2023 போட்டி முடிவடைந்த சில நாட்களில் இந்திய அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில் பிசிசிஐ டிவியிடம் ரஹானே பேசியதாவது: 18-19 மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பும்போது, நல்லது அல்லது கெட்டது என எது நடந்திருந்தாலும் எனது கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க நான் விரும்பவில்லை. நான் புதிதாகத் தொடங்க விரும்புகிறேன்.
நான் என்ன செய்கிறேனோ அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். ஐபிஎல் போட்டிக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் நான் சிறப்பாகவே விளையாடினேன். அதனால் இந்த மீள் வருகை உணர்ச்சிகரமாகவே இருந்தது” என்றார்.
பேட்டிங் செய்யும் விதம் குறித்துப் பேசிய அவர்,”ஐ.பி.எல். மற்றும் ரஞ்சி டிராபியில் நான் விளையாடிய அதே மனநிலையுடன் இப்போதும் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். டி20 அல்லது டெஸ்ட் என எந்தவிதமான போட்டி என்பது பற்றி யோசிக்க விரும்பவில்லை.
நான் இப்போது பேட்டிங் செய்யும் விதம் போன்ற விஷயங்களை மேலும் சிக்கலாக்கவும் விரும்பவில்லை. நான் அதை எவ்வளவு எளிமையாக வைத்திருக்கிறேனோ அதுவே எனக்கு நல்லது என நினைக்கிறேன்” என்றார்.
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்துப் பேசிய ரஹானே,” இப்போது அணியில் வீரர்களுக்கிடையே பிணைப்பு நன்றாக இருக்கிறது. ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அணியை மிகவும் சிறப்பாக கையாளுகின்றனர். அணியின் சூழ்நிலை மிகவும் முக்கியம். அணி வீரர்கள் நல்ல புரிதலுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது” எனறு மனம் திறந்து பேசினார்.

