சென்னையைச் சார்ந்த திருமதி என்.முத்தமிழ்ச் செல்வி, 2023-ஆம் ஆண்டு “ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம் ” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு 02.04.2023 – அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு நேபாளம் சென்றார்.
நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முத்தமிழ்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.

இவர் 2023- ஏப்ரல் 2- ந்தேதி சென்னையிலிருந்து காட்மாண்டு சென்றார். ஏப்ரல் 5-ந்தேதி கேம்பிற்கு (started to Base camp) பயணத்தை தொடங்கினார். ஏப்ரல் 19- ந்தேதி லோபுச் பகுதி உயரத்தை (20075அடி – 6119 – மீட்டர் உயரம்) (LOBUCHE PEAK SUMMIT -20075 feet – 6119 meter) அடைந்தார். மே-18-ந்தேதி மவுண்ட் எவரெஸ்டக்கு பயணத்தை தொடங்கினார். மே-23-ந்தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார். (MOUNT EVEREST SUMMIT -29035 FEET-8848.86 METER completed successfully). மே-24-ந்தேதி கேம்ப்-2- க்கு வந்து சேர்ந்தார்.
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த முத்தமிழ்செல்வி-யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்.முத்தமிழ்ச் செல்வி, எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர்உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூபாய் 10-இலட்சத்திற்கான காசோலையினை 28.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப் பெண்
இந்நிலையில் சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வல அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூபாய் 15-இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து செய்தியில், ‘’எவரஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி. அவரது பயணத்துக்கு கழக அரசு & தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்’’ என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி திருமிகு. முத்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துகள்!’’ என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த முத்தமிழ்ச்செல்வி ?
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் தம்பதியரின் மகள் முத்தமிழ்ச்செல்வி. திருமணத்திற்கு பிறகு சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். இத்தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் முத்தமிழ்செல்வி மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்.

