மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆகியோர் இன்று (27.05.2023) சென்னை டுமீங்குப்பத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல்வேறு மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. குறிப்பாக வருமுன் காப்போம் முகாம்கள், கலைஞரின் வருமுன் காப்போம் என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக மிகச் சிறப்பான வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 3 என்ற வகையிலும், மாநகராட்சிக்கு 4 இடங்களிலும், சென்னை மாநகராட்சியில் 15 இடங்களுமாக மொத்தம் 1250 இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டதை காட்டிலும் கூடுதலாக நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பெறுத்தவரை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மிகச்சிறப்பான வகையில் 1779 மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவமனைகளில் (811 அரசு மருத்தவமனைகள்) இந்த திட்டம் செய்லபடுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தனியார் மருத்தவமனைகளை பொறுத்தவரை 968 மருத்துவமனைகளில் இந்த காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. 1.40 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றிக்கு தலா ரூ. 5 இலட்சம் வீதம் பயன்பெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்ற வகையில் இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எறத்தாழ ரூ.22 இலட்சம் அளவிற்கு பயன்பெற்று வருகிறார்கள். இருதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணையம் மாற்றும் அறுவை சிகிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை என்று பலவகைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். புதியதாக இந்த காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்கை செய்யும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது
திருச்சி, ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மிகப் பழமை வாய்ந்த மருத்துவமனைகளாகும். திருச்சி மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மிகச் சிறப்பான பணியினை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையம் சிறிய குறைகளான CCTV கேமராக்கள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இல்லை என்ற குறைகள் சொல்லியிருக்கிறார்கள். இந்த குறைகளையும், பழுதடைந்துள்ள CCTV கேமராக்களையும் விரைவில் சரிசெய்து கொடுத்துவிடுவோம்.
ஆனால், இதற்கு மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து போன்ற செய்திகளை பெரிதாக வெளியிடுவது என்பது வருத்தத்திற்குரியது. இந்த சிறிய குறைகளுக்காக அங்கீகராம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளை சொல்வது என்பது இந்த மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கிறது.
நடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வருவதாலும், அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை குறைசொல்வது போன்ற செயல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. மத்திய மாநில அரசின் உறவுகளுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசுவது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது, எனவே சற்று பொறுமையாக இருப்பது நல்லது’’

