“தமிழ்நாடு அரசு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில் அமர்ந்து போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களின் வசதிக்காக முதற்கட்டமாக தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 10 மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுத்துவதற்கு ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, சென்ற மாதம் சென்னையில், செய்தித் துறை கட்டுப்பாட்டின் கீழ் மணிமண்டபங்கள் மற்றும் நூலகங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவு சார்ந்த புத்தகங்கள் அதிகமாக இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில், இந்த நூலகங்களில் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு வெற்றியடைய பாடுபடும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, தனக்கு வழங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மரு.இரா.செல்வராஜ், மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், ஆகியோர்களிடம் தலைமைச் செயலகத்தில் இன்று (07.06.2023) வழங்கினார்.
தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கிய புத்தகங்களை மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. டிஎன்பிஎஸ்சி, எஸ்.எஸ்.சி, வங்கித்தேர்வு, ஆசிரியர் தேர்வு என்று பல்வேறு போடித்தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்நூலகங்களை பயன்படுத்திட வேண்டுமாறு கேட்டகொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு-வின் இந்த தரமானச் செயலை போட்டித் தேர்வெழுதுவோர் உற்சாகமுடன் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு வருகிறனர்.

