மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் சென்னை, தேனாம்பேட்டை, விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.6.2023 அன்று முதற்கட்டமாக 125 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நலவாழ்வு மையங்களும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதநிதிகள், உள்ளுர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நலவாழ்வு மையங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மா, வாழை இலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. முதலமைச்சர், சென்னையில் நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து பேசி முடித்ததும் மற்ற, 499 மையங்களிலும் அந்தந்தப் பகுதியைச் சேந்த மக்கள் பிரதிநிதிகள் குத்து விளக்கு ஏற்றினர்.
சென்னையில் நடந்த தொடக்க விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரைக்கும், கல்வி – மருத்துவம் ஆகிய இரண்டையும் திராவிட மாடல் அரசு இரண்டு கண்களாக நினைத்துப் போற்றி வருகிறோம் – செயல்படுத்தி வருகிறோம். கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும் மக்கள் நலம் பேணுவதில் மிகச் சிறந்த தமிழ்நாடாகவும் நம்முடைய மாநிலம் இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது.
ஆனால், இப்படி தலைநிமிர்ந்து நிற்றக்கூடிய நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்திலே மிக பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் அது புலப்படவில்லை. அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த கருத்துக்களை எல்லாம் விமர்சனங்களாக்கி தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களை குழப்பக்கூடிய வகையிலே அவர் செய்து கொண்டிருக்கிறார்.
அதை பற்றியெல்லாம் மக்கள் கொஞ்சம்கூட கவலைப்பட மாட்டார்கள். அதையெல்லாம் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து அப்படி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
நம்மை ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழா ஜுன் 3-ஆம் தேதியிலிருந்து நாம் கொண்டாட தொடங்கியிருக்கிறோம். இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக திட்டமிட்டு, நம்முடைய அரசின் சார்பிலே ஏனென்றால் இந்த அரசே அவருடைய அரசு, ஐந்து முறை தமிழகத்திலே ஆட்சிப் பொறுப்பிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து காட்டியிருக்கக்கூடியவர். அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்காக
கண்ணொளி காப்போம் திட்டம்,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்,
வருமுன் காப்போம் திட்டம்,
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்,
108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம் – போன்ற எண்ணற்ற சுகாதாரத் திட்டங்கள் நம்முடைய நாட்டில் முன்னோடித் திட்டங்களாகக் கொண்டு வரப்பட்டு, இன்றளவும் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பாதையில்தான் நமது அரசின் நல்வாழ்வுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதுநாள் வரையில் தொழில்துறை நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்கு அடுத்தப்படியாக நான் அதிகமாகக் கலந்துகொண்டது மக்கள் நல்வாழ்வுத் துறை நிகழ்ச்சிகள்தான். அந்த அளவிற்கு இன்றைக்கு இத்துறையில் பல முன்னேற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எத்தகைய சூழலில் நாம் பொறுப்பேற்றோம் என்பது, உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கொரோனா என்ற கொடிய தொற்று நோய், அந்த அலை தீவிரமாக இருந்த காலத்தில், ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்தபிறகு அதனைக் கட்டுப்படுத்தினோம். அன்று நம்முடைய மாண்புமிகு அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியம் அவர்கள் எந்த அளவிற்கு பணியாற்றினார். அவர் மாரத்தான் வீரர் மட்டுமல்ல பணியாற்றுவதிலும் ஒரு மாரத்தான் வீரராக இருந்து பணியாற்றினார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும்.
நாட்டிற்கே முன்னோடியான இந்தத் திட்டத்தைப் புகழ்ந்து உலக சுகாதார அமைப்பே தனது வலைத்தளத்தில் ஒரு பாராட்டு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதாவது பயனாளிகளுக்கு அவர்கள் வீட்டை விட்டே வெளியே வரத் தேவையில்லாமல், மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனை மேற்கொள்வது, நோய்க் கண்டறிவது, சிகிச்சை தருவது, மருந்துகளைத் தருவது பற்றி எழுதப்பட்டுள்ளது.
அதை தயவுசெய்து குறை சொல்கின்ற அவர் படித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதிலும் பெண் மருத்துவப் பணியாளர்கள் எப்படி இந்தத் திட்டத்தின் முதுகெலும்பாகச் செயல்படுகிறார்கள் என்பது பற்றியும் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். உலக அமைப்பே பாராட்டும் வகையில் நாம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

கொரோனா அலையையும் எதிர்கொண்டு, மக்களைக் காத்து, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பையும் வளர்த்தெடுத்தோம். இதற்குக் காரணமான அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, அத்தோடு அவருக்கு துணை நிற்கக்கூடிய அனைத்து அதிகாரிகளையும் பணியாளர்களையும் இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன்.
இந்த வரிசையில்தான் இன்னொரு மகத்தான திட்டமாக நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 01.04.2022 அன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பிற்கிணங்க அங்கு நகர்ப்புறங்களில் இயங்கி வரும் ‘மொகல்லா கிளினிக்’ எனப்படும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தைப் நான் பார்வையிட்டேன்.
அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் உட்கட்டமைப்பு எற்படுத்துவதற்கான அனுமதி 2021-22 ஆம் ஆண்டு 593 மையங்களுக்கும் 2022-23 ஆம் ஆண்டு 115 மையங்களுக்கும் அளிக்கப்பட்டது. இவற்றுக்கான கட்டடப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் இன்றைய நாள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 125 கோடி ரூபாய்.
இந்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 172 வகை முக்கியமான மருந்துகளும், 64 வகை அவசியமான ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவதும் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. “அனைவருக்கும் நலவாழ்வுத் திட்டம்” என்பது இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாக அமையப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம், நகர்ப்புற மக்களுக்கு, குறிப்பாக – குடிசை வாழ் மற்றும் நலிந்த மக்களுக்கும் தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்படும். அனைத்து ஆரம்ப சுகாதார சேவைகளையும் மக்கள் எந்தவித பொருட்செலவின்றி அவர்களின் வசிப்பிடத்திற்கு பக்கத்திலேயே எளிதில் தடையின்றிப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதைப் போல மக்களது உடல்நலத்தில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது.
மருத்துவம் நவீனமயமாக வேண்டும். புதிய நோய்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக நமது மருத்துவர்கள் செயல்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகள் நிறைய நடக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களையும் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் எப்படி ஏழை எளியோரின் நம்பிக்கையாக இருக்கிறதோ, அதை போலவே நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் செயல்பட வேண்டும்.
இன்று 500 மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே வரும் என்பதில் ஐயமில்லை. வாழ்விடத்துக்கு அருகிலேயே பள்ளிகள் இருப்பதைப் போல, அருகிலேயே மருத்துவமனைகள், நிரந்தர மருத்துவ மையங்கள் என்ற சூழலை நிச்சயமாக விரைவில் உருவாக்குவோம். அதை மக்களும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.’’
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

