மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இயக்க தந்தை வைகோ அவர்கள் 1989 ஆண்டு பிப்ரவரி மாதம் ஈழத்தில் கடும் போர் நடந்து கொண்டிருந்த நிலையில், விசா வாங்கி கொண்டு விமானத்தில் செல்லவில்லை, அங்குள்ள சூழலை அறிய தன் உயிரை துச்சமென நினைத்து சிறிய மீன்பிடி படகில் குண்டு மழைகளுக்கு இடையே ஈழத்திற்கு சென்றார். அத்தகைய தீர செயலை , பாஜகவை சேர்ந்த நாராயணன் நகையாடி ஒரு பதிவிட்டுள்ளார்.
அவருக்கு பதிலடியாக மதுரை மண்டல இணையதள பொறுப்பாளர் சகோதரர் மானாமதுரை மருது எழுதிய பதிவு.
கள்ளதோணியில் ஈழம் சென்று தாயகம் திரும்பிய தலைவர் வைகோ நாடாளுமன்ற அவைக்கு செல்லும் பொழுது காங்கிரஸ், பாஜக என கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மேசையை தட்டி வரவேற்றனர். அந்த அரும்பெரும் நிகழ்வை சொல்ல வைத்த நாராயணன் அவர்களுக்கு நன்றி
இதோ அந்த நிகழ்வு:
நாடாளுமன்றத்தில் வைகோவுக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு
ஈழப்பயணம் சென்று திரும்பிய தலைவர் வைகோ, 1989 மார்ச்சு 30 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.
இதே நாடாளுமன்றத்தில் கனல் கக்கும் விழிகளுடன் காங்கிரஸ் கட்சியின் மீதும், பிரதமர் மீதும் எத்தனை தடவை வைகோ கணைகளை வீசி இருப்பார். கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருப்பார். ஆனால், வைகோ யுத்த களத்திலிருந்து உயிரோடு மீண்டு, நாடாளுமன்றத்தில் நுழைந்த போது, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேசைகளைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். அன்றைக்கு வைகோ பேச எழுந்த போது, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே மேசையைத் தட்டி பலத்த வரவேற்பு அளித்தனர்.
மாநிலங்களவைத் துணைத்தலைவர் நஜிமா ஹப்துல்லா: கோபால்சாமி எந்த ஆபத்தும் இன்றி பத்திரமாக வந்து சேர்ந்து திரும்பவும் சபைக்கு வந்ததில் அனைவரும் இன்று சந்தோஷப்படுகிறோம். இந்த சபை அவரை வரவேற்கிறது. ஏனெனில் அவருக்கு அபாயம் ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்றுதான் அனைவரும் கவலைப்பட்டோம்.
பாராளுமன்றத்துறை அமைச்சர் எம்.எம்.ஜேக்கப்: கோபால்சாமி திரும்பி வந்ததில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். முழு அங்க அவயங்களோடு எந்த சேதமும் இல்லாமல் அவர் வந்ததே போதும். போய் வந்த விபரம் பற்றி அறிக்கை தரப்போகிறாரா?
ஏ.ஜி.குல்கர்னி(இ.காங்கிரஸ்): கோபால்சாமிக்கு மூளைச்சலவை (Brain Wash) செய்யப்பட்டு வந்திருக்கிறாரா என அறிய விரும்புகிறேன்.
வைகோ: எனக்கு யாரும் மூளைச்சலவை செய்ய முடியாது. தேவைப்பட்டால்
மற்றவர்களுக்கு நான் மூளைச்சலவை செய்யக்கூடியவன். (சபையில் பலத்த
சிரிப்பு) வலிவுல்லா(இ.காங்கிரஸ்): கடல் தண்ணீர் மூலம் பயணம் வந்ததால் மிக வும் சுத்தமாக வந்து இருக்கிறார்.
பன்ஜல், அனுமந்தப்பா, புதுவை நாராயணசாமி(இ.காங்கிரஸ்): எங்கள் கவலை எல்லாம் கோபால்சாமி உயிருடன் திரும்ப வேண்டும் என்பதுதான். அவர் திரும்பி வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
குருபாதசாமி (ஜனதாதளம்): கோபால்சாமி எந்த ஆபத்தும இன்றி சுகமாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கவலை தீர்ந்தது.
பி.உபேந்திரா(தெலுங்குதேசம்): இனி சபை நடவடிக்கைகளில் உற்சாகமாகப் பணியாற்றக்கூடிய கோபால்சாமியைத் தொடர்ந்து பார்க்கலாம்.
எல்.கே.அத்வானி(பி.ஜே.பி): சபையில் கோபால்சாமி இல்லாதது பெரிய குறை யாக இருந்தது. கொரில்லா தந்திரத்தோடு போய்வந்துவிட்டார்.
சுக்குமோல்சென்(மார்க்சிஸ்ட்): கோபால்சாமி மீண்டும் திரும்பி வந்ததில் நாங்கள் உற்சாகம் அடைகிறோம்.
நன்றி காணிக்கை
வைகோ : எனது நலனிலும், பாதுகாப்பிலும் அக்கறைகொண்டு, நான் சபையில் இல்லாத காலத்தில் கவலை தெரிவித்த ஆளும்கட்சி – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இன்று என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அவைத்தலைவர் , ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றியைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

