சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு என்று மொத்தம் 17 விடுதிகள் உள்ளன. இதில் 11 விடுதிகள் மாணவர்களுக்கானது. 6 விடுதிகள் மாணவிகளுக்கானது.
இலவசம்:
இவ்விடுதிகளில் கல்லூரி பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேரலாம். எவ்வித செலவினமும் இல்லாமல் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தகுதிகள்:
பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி, மாணவியருக்கு பொருந்தாது.
விண்ணப்பம்:
தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
சான்றிதழ்கள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் 15.07.2023 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
இலங்கை தமிழர்:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகவலை சென்னை மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

