இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சுனில் காவஸ்கர் இன்று 74-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 1971 முதல் 1987 வரை ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டங்களை விளையாடியிருக்கிறார் காவஸ்கர்.
இவர் கிரிக்கெட் வாழ்க்கையை மும்பை ஆடுகளங்களில் தொடங்கியிருந்தாலும், மேற்கிந்தியத் தீவுகளின் சவால்கள் நிறைந்த சீறிப்பாயும் ஆடுகளங்களில் சாதித்துக்காட்டியதால் ஜாம்பவான் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 233 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் மொத்தம் 13,214 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையைப் படைத்தவர் காவஸ்கர்.
தன்னுடைய பேட்டிங் மூலம் பல தலைமுறைகளை கிரிக்கெட்டினுள் ஈர்த்திருக்கிறார். சச்சின் முறியடிக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் (34 சதங்கள்) அடித்தவர் என்ற சாதனையை காவஸ்கர் தன்வசப்படுத்தியிருந்தார். மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், ஜெஃப் தாம்ப்சன், டென்னிஸ் லில்லீ போன்ற மிரட்டல் வேகப்பந்துவீச்சாளர்கள் கோலோச்சியபோது பேட்டிங்கில் சாதித்துக் காட்டியவர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இவரது சாதனைகள் இன்றும் பேசப்படும் அளவுக்குப் பெரியது. கிரிக்கெட் உலகை மிரட்டி வந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்த காலகட்டத்திலேயே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 27 டெஸ்டில் விளையாடி, 13 சதங்களை விளாசியிருக்கிறார். குறிப்பாக 1971-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அறிமுகத் தொடரிலேயே இரட்டை சதம் அடித்தது உள்பட மொத்தம் 774 ரன்கள் எடுத்தார்.
விக்கெட் கீப்பர்களுக்கு அப்பாற்பட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தவரும் காவஸ்கர்தான். ஓய்வுக்குப் பிறகு வர்ணனையாளராக கலக்கி வருகிறார். வீரர்கள் குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, அணித் தேர்வு குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, இவரது பேட்டிங்கைப் போல இவரது சொற்களுக்கும் பெரும் மதிப்பு உண்டு

