spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா"கோரமண்டல் ரெயில் கோர விபத்து: பலி 207 ; காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது"

    “கோரமண்டல் ரெயில் கோர விபத்து: பலி 207 ; காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது”

    கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 3 ரெயில்கள் மோதியதில் இதுவரை 207 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது

    கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 3 ரெயில்கள் மோதியதில் இதுவரை 207 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது.

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    தமிழ்நாடு-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக ரெயில்களில் ஒன்றான இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த ரெயில் நேற்று மாலையில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு இருந்தது. அந்த ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.

    இதனால் எதிர்பாராத விதமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரசின் 10பெட்டிகள் தடம் புரண்டு 3-வது தண்டவாளத்தில் விழுந்தன.

    அந்த பெட்டிகள் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் இருந்த ஏராளமான பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலரும் பலத்த காயம்  வலியால் துடித்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.

    இந்த பயங்கரத்தில் மற்றொரு பேரிடியாக, தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றின் மீது மோதின. இதில் அந்த பெட்டிகள் மேலும் சேதம் அடைந்ததுடன், அதில் சிக்கியிருந்த பயணிகளின் நிலையும் மோசமானது.

    இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார மக்கள் உடனே அங்கே விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதி முழுவதும் மக்களின் மரண ஓலமும், ரெயில் பெட்டிகளின் குவியலுமாக கோரமாக காட்சி அளித்தது. அதேநேரம் சம்பவ இடம், அதிக மக்கள் வாழிடம் இல்லாத வனம் சார்ந்த ஒதுக்குப்புறமான பகுதி என தெரிகிறது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் காரிருள் சூழ்ந்திருந்தது. இந்த விபத்தில் சிக்கிய ரெயில்களின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து உள்ளன.

    இந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் சுமார் 400 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், 350 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகின.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தென்கிழக்கு மண்டல ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு உள்ளூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகளை தொடங்கினர்.

    அத்துடன் மாநில பேரிடர் மீட்புக்குழுவினரையும் ஒடிசா அரசு விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 3 குழுவினர், 26 பேர் அடங்கிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ரெயில்வே அதிகாரிகளுடன் இணைந்து அவர்களும் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். இதில் ரெயிலின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகள் விரைவாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

    பலத்த காயம் அடைந்த பயணிகள் பாலாசோர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 60-க்கு மேற்பட்ட ஆம்புலன்சுகள் பணியில் அமர்த்தப்பட்டன. மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.

    இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக், வருவாய்த்துறை மந்திரி பிரமிளா மாலிக் மற்றும் மாநில நிவாரண கமிஷனர் சத்யபிரத சாகு மற்றும் உயர் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார்.

    விபத்து நடந்த பகுதியில் மின்சார வசதி இல்லாததால் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் ராட்சத விளக்குகளை அதிகாரிகள் துரிதமாக பொருத்தி மீட்பு பணிகளை தொடங்கினர்.

    இந்தநிலையில், இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜேனா தகவல் தெரிவித்துள்ளார்.

    விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது. ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்க பாலசோர் மருத்துவமனையில் தன்னார்வலர்கள் குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்தம் வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments