காவிரியின் வரலாறு தெரியாமல் கருத்து தெரிவித்திருக்கும் ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் -க்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். அதில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கே காவிரியில் தண்ணீர் திறந்து விடும் அதிகாரம் உண்டு என்று ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில் வருமாறு:
கடந்த இரண்டு மாதகாலமாக கர்நாடகம் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை.
இது குறித்து முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கும், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களை நான் இரண்டுமுறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் முழுமையாக செயல்படவில்லை!
காவிரியிலிருந்து தண்ணீரை திறந்து விடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்குதான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்கள் கலந்து கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும்என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் இதுவரையில் முழுமையாக செயல்படவில்லை. நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை Pro Rata Basis என்று குறிப்பிடுவார்கள். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை. இந்த வாரியம் ஒன்றிய அரசின் கீழ்இயங்குகிறது. எனவேதான் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்யவேண்டும் என்றுதான் தமிழக முதல்வர் அவர்களும் பிரத மருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
அந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகமோ அல்லது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் என்பவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சினையைநேரில்பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.
ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அர்களுக்கு காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சினை குறித்து பேசிபேசி எந்தமுடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்சநீதி மன்றத்திற்கு போய், உச்சநீதிமன்றம் சிலதிருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்டபிறகு இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு.
உரிமையை நிலைநாட்டுவதில் அவரவர் உறுதி!
‘தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுவேறு’என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலை நாட்டுவதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடுதான் தமிழகத்தின் நிலைப்பாடு.
இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் தளபதிக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அடிப்படை வரலாறு தெரியாமல் பேசும் ஒன்றிய அரசு!
இதில் இன்னொரு வேடிக்கை. வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது என்னவென்றால், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கர்நாடக மாநில முதல்வரோடும், நீர் வளத்து றை அமைச்சரோடும் பேசி தண்ணீரை பெறவேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான். இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றம் போனோம், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்சநீதி மன்றத்தைத்தான் நாடேவேண்டுமேதவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியாத தனம் தான். பாவம், அரசியல் பிரச் சினையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார் என்பதைத்தான் அவர் அறிக்கை காட்டுகிறது.
இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

