எம் அகம்நிறை அய்யா, கலைஞர் அவர்களே ! இன்று ஆகஸ்ட் 7, உங்களுடைய நினைவு நாள் !
நினைவுநாள் என்பது மறைந்த நாள் !
எல்லா நாளிலும், உங்களைப் பற்றிய நினைவே எம் நெஞ்ச மெல்லாம் நிறைந்திருக்கும்போது, நினைவு நாள் என்பது காலக் குறியீடேயன்றி வேறில்லை. நீங்கள் மறைந்து, எவ்விடத்தும் நிறைந்தி ருக்கிறீர்கள்; நேரடியாகப் பார்த்துப் பார்த்து, உடன் பிறப்புகளை ஒவ்வொரு நொடியும் நெறிப்படுத்திக் கொண்டிருந்த நீங்கள், மறைந்திருந்து பார்த்து, உங்களின் மகத்துவத்தை எமது மனதினில் எந்நாளும் மின்னலாய்ப் பாய்ச்சிக் கொண்டுள்ளீர்கள்!
எனவே நீங்கள் மரணமடைந்து விட்டீர்கள் என்று எம் நெஞ்சம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? கண்காணும் காட்சி எதிலும், செவி கேட்கும் செம்பொருள் அனைத்திலும், நீங்களே நீக்கமற நிறைந்திருக்கும்போது, இறந்து விட்டீர்கள் என்று எம் இதயந்தான் எண்ணிப் பார்த்திடுமோ? அந்தக் கொடும் பிழையை எப்போதும் இழைத்ததில்லை எமது இதயம்!
நீங்கள் மரணமடையவுமில்லை, இறந்து விடவுமில்லை.“வீரன் சாவதே இல்லை”என்று விவேகமொழி பகர்ந்தவர் நீங்கள்தானே!
நீங்கள் இயற்கையிலேயே வீரராய் இருந்ததனால்தானே;
திருவாரூரில் உங்களுடைய திருமண நாளன்று, பெரியார் வாழ்க! தமிழ் வாழ்க! இந்தி வீழ்க! என்ற முழக்கங்களோடு , தமிழ் வீரத்துடன் சொந்த மண விழாவினையே புறக்கணித்துவிட்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துடன் கலந்துவிட்டீர்கள்!
நீங்கள் இயல்பாகவே வீரராய் இருந்ததனால்தானே;
கல்லக்குடி போராட்டத்திலே தலைமை ஏற்று,“எங்களுக்கு முன்னே நின்றிருந்த ரயிலின் ‘கிரீச்’ என்ற சப்தமோ -– – அல்லது ரயில் எம்மீது ஏறி எமது எலும்புகள் ‘மளுக்’ ‘மளுக்’ என்று முறியும் சப்தமோ -– தில்லி ஆட்சி பீடத்தின் காதில் எட்டுமோ எட்டாதோ? மக்கள் மன்றத்திற்கு எட்டும், நிச்சயமாக எட்டும்.அது இந்த ஆதிபத்தியக்காரரை ஆயிரம் தேள்போலக் கொட்டும்”என்ற மன தைரியத்துடன், கடலின் கொந்தளிப்பு உள்ளத்திலே, காலைக் கதிரவனின் நிறம் கண்களிலே, சேவலின் மிடுக்கு நடை யினிலே எனும்படி, நடைபோட்டுச் சென்று, தண்டவாளத்திலே தலைவைத்துப்படுத்தீர்கள் !
நீங்கள் விவேகம் மிக்க வீரராகவே வளர்ந்ததனால்தானே;
இந்திய அரசியலில் முன்னணியினர் பலரும் இந்திராவின் அவசர நிலைப் பிரகடனத்திற்கு அஞ்சி நடுங்கிப் பதுங்கிய போது,“உண்மையின் உருவம் மறைக்கப்பட்டு, பொய்யின் நிழலில் நின்றுகொண்டு, எதிர்க் கட்சிகளை அடக்கு வதற்குத் திட்டம் தயாரித்து, அந்தத் திட்டம் ஏன் தேவைப்படு கிறது என்பதற்கான போலிக் காரணங்களைத் தேடி அலைந்து, வீண் அபவாதங்களை வாரி இறைத்து – எடுத்ததற்கெல்லாம் சதி, வெளிநாட்டுத் தொடர்பு, பிற்போக்குவாதிகள் என்ற சொற்கணைகளைப் பொழிந்து காலா காலத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், சர்வாதிகாரத்திற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது”என்று; நீங்கள் ஒருவர்தானே, ஆவேசம் கொண்டு அழிவு தரும் அவசர நிலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றினீர்கள் !
நீங்கள் வீரராகவே பிறந்து, வீரராகவே விளங்கியதனால்தானே;
அன்றொரு நாள்,உங்கள் பிறந்த நாளுக்கு முதல்நாள், வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு, ஆயிரம் விளக்குப் பகுதியைத் தாண்டியதும் காரிலிருந்து இறங்கி, எமர் ஜன்சியை எதிர்க்கும் அறப்போர் விளக்கத் துண்டுப் பிரசுரங்களை உங்கள் கையிலே எடுத்துக் கொண்டு அதனை அண்ணா சாலையில் செல்வோர் அனைவரிடமும் நீங்களே விநியோகிக்க -– – மக்கள் ஆவலுடனும், ஆச்சரியத்துடனும் உங்களைப் பின்தொடர, போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில்,நடந்து கொண்டே அண்ணா சிலை அடி பீடம் வரை சென்று, கம்பீரமாகப் பறக்கும் கழகக் கொடியைக் கையிலே ஏந்தி, திடீரெனச் சேர்ந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான தோழர்கள் மத்தியிலே,சர்வாதிகாரம் வீழ்க! ஜனநாயகம் வாழ்க! என்று வீராவேசத்துடன் முழக்கமிட்டீர்கள்!
உங்கள் பிறப்பிலிருந்தே தொடர்ந்த மன உறுதியினால்தானே;
கட்சிக்குள்ளே பேசித் தீர்வு காண வேண்டிய பிரச்சினையை, திட்டுமிட்டு வெளியே, பொதுத் திடலில் மக்களைக் கூட்டி வைத்துக் கொண்டு பேசிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை, கட்டுப்பாடு பேண கட்சியை விட்டே விலக்கி வைக்கவும்; சட்டப் பேரவைத் தலைவராக இருந்த கே.ஏ.மதியழகன் அவர்களை, சூழ்ச்சியான எண்ணத்து டனும், ஏற்ற பதவிக்கு முரண்பாடாகவும் அவைக்குள்ளேயே நடந்து கொண்டதால்,பதவியிலிருந்து இறக்கவும்; கட்சியின் பெரும்பான்மையோரின் எண்ணத்தை அறிந்து, தீர்மானித்தீர்கள் !
அய்யா, இவ்வாறு உங்கள் வாழ்க்கை நெடுகிலும் வீர வரலாற்றின் ஏராளமான பக்கங்கள். “வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்” என்று, முறை வகுத்ததும் நீங்களே! விவேகமும், வீரமும் விடியலைப் போலத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்; பகலோ இரவோ, விடியலை மாற்றிப் போடுவதில்லை.உங்களுடைய வாழ்க்கை, தமிழுக்கும், தமிழ்இனத்திற்கும் கிட்டிய விடியல்.தமிழ் மொழியின் நெஞ்சத்திலும்,தமிழ் இனத்தின் நினைவிலும் எழுச்சியின் ஏற்றமிகு சிற்பமாய் நிலைத்து விட்டவர் நீங்கள் !
அலெக்ஸாண்டரைப் போன்ற மாவீரர் நீங்கள் ! நாடுகள் தோறும் படையெடுத்து, வெற்றிக் கொடி நாட்டிய கிரேக்க மாவீரனைப் போல; தமிழ் இலக்கியத்தின் வகைகள்தோறும், புலமை துணை கொண்டு, தொகை தொகையாய்ப் புத்திலக்கியம் படைத்து, வெற்றிக் கொடி நாட்டிய மாவீரர் நீங்கள்!
உங்களுக்கு ஏது இறப்பு ? என்றும் இருப்பு மட்டுமே! மறைந்தும், எங்கணும் நிறைந்திருக்கும் மாமனிதர் நீங்கள்!
அய்யா, நீங்கள் ‘அசல்’ ; இன்று எம் தளபதி, அசலின் ‘நகல்’. நகலை, நாளும் கண்டு கண்டு, அசலின் அருமையை ஆர்ப்பரிக்கிறது தமிழ் கூறு நல்லுலகம் !
-நன்றி முரசொலி

