சென்னை டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் எந்த நிலையிலும் கழகத்திற்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத நிலையில் கழகத்தின் கொடியை பயன்படுத்துவதோ, கழகம் என்ற பெயரைக்கூட சொல்லக்கூட தகுதியற்றவர்கள். கழகத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பதிவும் உள்ளது. ஒ.பன்னீசெல்வமும் சரி, அவரை சார்ந்தவர்களும் சரி, அதிமுக என்ற பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. கட்சி சின்னத்தை உபயோகப்படுத்தக்கூடாது. இரட்டை இலையை உபயோகப்படுத்தக்கூடாது. போஸ்டரில் அதிமுகவின் பெயரையோ, சின்னத்தையோ, கட்சி கொடியையோ பயன்படுத்தக்கூடாது.
கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் இருப்பவர்கள்தான் இதனை எல்லாம் பயன்படுத்த முடியும் என்ற உத்தரவின் அடிப்படையில் இன்றைக்கு அதனை எல்லாம் மீறி, சட்டத்தை நாங்கள் மதிக்க மாட்டோம், சட்டம் என்ன செய்யும் என்ற வகையிலே தான்தோன்றிதனமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் தரப்பினரும் கட்சியின் கொடியை பயன்படுத்துவது, கட்சியின் பெயரை பயன்படுத்துவது, சின்னத்தை பயன்படுத்துவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையின் முகவரியை லெட்டர்பேடில் பயன்படுத்துவது, முழுவதுவமாக சட்டவிரோதம்.
சீட்டிங், ஃப்ராடு என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் இவர்கள் மீது வருவதற்கு காரணங்கள் சரியாக இருக்கின்றது. இதுபோலதான் கர்நாடக தேர்தலில் எங்கள் கட்சியின் பெயரை பயன்படுத்தியபோது, எங்கள் கட்சியின் இது குறித்து புகார் அளித்தபோது அங்கிருக்கும் காவல்துறை சீட்டிங், ஃப்ராடு என்று வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
அதுபோல காவல்துறை தலைவர் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளருக்கும் தேவையான உத்தரவுகளை வழங்கவேண்டும்.வேண்டுமென்றே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும், வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவேண்டும் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சேலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது. எங்கள் கட்சியின் சின்னத்தை, பெயரை பயன்படுத்தும்போது இது தொடர்பாக புகார் அளிக்கும்போது நமது கட்சியினரை விசாரிப்பது என்றால் இது எந்த வகையில் நியாயம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். இது கொஞ்சம்கூட நியாமற்ற செயல்.
சட்டத்திற்கு புறம்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சட்டத்தை கையில் எடுக்கும்போது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற உள்நோக்கத்தையோடு செயல்படும்போது முழுமையான அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற வகையில் கழகத்தின் சார்பில் டிஜிபியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். குழப்பம், சட்டம் ஒழுங்கு இவை இரண்டையும் ஏற்படுத்தவேண்டும் என்ற தீய எண்ணத்ததோடு செயல்படுகின்ற நிலையை முற்றிலும் தடுக்கவேண்டியது காவல்துறையின் கடமை. இல்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்று டிஜியிடம் தெரிவித்துள்ளோம்.
நீதிமன்றத்தை நாடும்போது எல்லோரும் பதில் சொல்லவேண்டிய நிலை வரும். உச்சநீதிமன்றம்,உயர்நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது.நாங்கள்தான் கட்சி என்று தெரிவித்துள்ளது. சின்னம் நாங்கள்தான்.கொடி நாங்கள்தான்.வேறு யாரும் எங்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை எந்தவகையிலும் உபயோகப்படுத்தக்கூடாது. இதனை முறையாக செயல்படுத்தி,சட்டம் ஒழுங்கை காப்பாற்றவேண்டியது காவல்துறையின் கடமை.இல்லை என்றால் நாங்கள் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை வரும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:
தற்காலிகமாகதான் சின்னம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பினர் குறிப்பிடுகிறார்களே?
நீதிமன்றம் எங்களுக்குதான் அனைத்தும் என்று உறுதிபடுத்தியுள்ளதல்லவா. அதிமுக கொடியை யார் பயன்படுத்த வேண்டும்? நாங்கள்தான் பயன்படுத்தவேண்டும். அதிமுக என்று யார் சொல்ல வேண்டும். நாங்கள்தான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.
சசிகலாவும் தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்துகிறார்களே?
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும், இதனை முழுமையாக உறுதிபடுத்திய நிலையிலே நாங்கள்தான் கட்சி. சின்னம் எங்களுடையதுதான். தலைமைக்கழகம் எங்களுடையதுதான். அதிமுக எங்களுடையதுதான் என்று சொல்லும்போது அதனை மீறி செயல்பட்டால் ஒவ்வொருவரும் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாவார்கள். இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

