பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் இன்று 19.05.2023 கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வள மேலாண்மை, தொழிற்சாலை நிர்வாகம், தானியிங்கி முறைகள் (Automation methods), பால் உள்கட்டமைப்பு மேலாண்மை, விரிவாக்க அலகுகளை அமைத்தல், போக்குவரத்தை தானியக்கமாக்குவதற்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல், நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துதல், ஆற்றல் சேமிப்பு இயந்திரங்கள், விவாசாயிகளுக்கு தரமான தீவனம் வழங்குதல் மற்றும் வணிக விரிவாக்கம் குறித்து அலுவலர்கள் மற்றும் பால்வளத்துறைக்கு பல்வேறு திட்டத்திற்கு நிதி வழங்கும், நிதி நிறுவனமான NABARD, திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கும் அரசு அமைப்புகளான TANII, SBGF, DIDF, NPDD, TAHDCO, RGM (MOFPI-PMSY) இவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்தும் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவையில் அறிவித்து நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது :
’’ஆவினில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்தினை இணைய வழியில் மட்டுமே செலுத்தப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மாவட்ட ஒன்றியம் மற்றும் இணையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களின் மாதாந்திர ஊதியத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்.
ஒப்பந்ததாரர்கள் அவ்வாறு வங்கிக் கணக்கில் செலுத்துவதை ஒன்றிய மற்றும் இணைய நிர்வாகம் கண்காணித்து உறுதி படுத்த வேண்டும். இதன் மூலம் தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர்களை தொடர்ந்து பணியாற்ற வைப்பதன் மூலம் வேலைத்திறன் மேம்படும்.
பால் பதப்படுத்துவதற்கான கட்டமைப்பை நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டர் கையாளும் திறனை உயர்த்தி அதற்கு ஈடாக நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பால் உற்பத்தியை பெருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் உகந்த சூழலை உருவாக்க வேண்டும், பால் உற்பத்தியை பெருக்க கால்நடைகளுக்கு சத்துக்கள் நிறைந்த தீவனம் கொடுக்கப்பட வேண்டும். கால்நடைகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.
ஆவினில் பால் தரம் சிறப்பாக உள்ளதால் அதனை மேலும் மேம்படுத்த வலுவான கட்டமைப்பை நவீனபடுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், கடற்கரை, பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் பாலகங்களை அதிகமாக்க வேண்டும்’’ என்று கூறினார்.
இக்கூட்டத்தில், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர்.ந.சுப்பையன், உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

