கர்நாடக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 5 வாக்குறுதிகள் முக்கியமானதாக பேசப்பட்டது. அந்த வாக்குறுதிகள் அனைவராலும் பேசப்பட்டது. அதை எப்படி நிறைவேற்றுவார்கள் என்று விவாதங்கள் நாடு முழுவதும் நடந்தது. அந்த 5 வாக்குறுதிள் விபரம் வருமாறு.
• கிரக ஜோதி எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குதல்.
• கிரக லட்சுமி எனப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2,000 வழங்குதல்.
• அன்ன பாக்யா எனப்படும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி வழங்குதல்.
• யுவ நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாதோருக்கு 2 ஆண்டுகளுக்கு அலவன்ஸ் தொகை (பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500) வழங்குதல்.
• சக்தி எனப்படும் திட்டத்தின் கீழ் கர்நாடகா முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் ஆகிய 5 உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், கர்நாடகாவில் பெங்களூருவில் முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி இன்று பதவியேற்று கொண்டனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை செய்து வைத்தார்.
இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் வழங்கிய 5 உத்தரவாதங்கள் மந்திரி சபை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டு, அவற்றை அமல்படுத்துவதற்கான உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று பேசுகையில், ‘’காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று ஆணையை வழங்கிய கர்நாடக மக்களுக்கு என் இதயப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசு உறுதியாக நிற்கும் என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
நமது ஐந்து உத்தரவாதங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த முதல் அமைச்சரவை கூட்டம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கர்நாடகாவின் செழுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் கட்சி அர்ப்பணிப்புடன் இருக்கிறது’’ என்று கூறினார்.

