தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை:
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவராகவும், பாரதப் பிரதமராகவும் பொறுப்பேற்று உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய பாரத ரத்னா ராஜிவ்காந்தி 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மே 21 ஆம் தேதி காலை 8.00 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்க இருக்கிறார்.
கர்நாடகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்று, வகுப்புவாத சக்திகளை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு அமரர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தலைவர் ராகுல்காந்தி வருகை புரிவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி மேற்கொண்ட வகுப்புவாத, அவதூறு பிரச்சாரத்தை முறியடித்ததில் தலைவர் ராகுல்காந்தி-க்கு பெரும் பங்கு உண்டு. கர்நாடகத்தில் அவர் பாத யாத்திரை மேற்கொண்ட பாதையில் அமைந்துள்ள 51 சட்டமன்றத் தொகுதிகளில் 37 இல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தியிருக்கிற ஆட்சி மாற்றம் 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள மோடியின் பாசிச, ஜனநாயக விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுகிற பேராற்றலும், வல்லமையும் மிக்க தலைவராக ராகுல்காந்தி விளங்கி வருகிறார். இதன்மூலம், இந்தியாவில் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கிற மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது.
எனவே, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற அமரர் ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கு தலைவர் ராகுல்காந்தி மே 21 அன்று காலை வருகை புரிகிற போது, காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”.

