முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (7.8.2023) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. “நான் முதல்வன்” திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள திறன் சாதனை கண்காட்சியை திறந்து வைத்தார்.
“நான் முதல்வன்” திட்டத்தை பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விரிவுப்படுத்தி, “நான் முதல்வன்” நிரலோட்ட இணைய தளம் (Hackathon), காலணி உற்பத்தி தொழில்நுட்பம், ஆயத்த ஆடை உற்பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் ஒரு புதிய இளங்கலை தொழிற்கல்வி பட்டப்படிப்பு, கலைஞர் 100 இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்து, ஒன்றிய அரசின் குடிமைப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு!
உயர் கல்வியில் அடியெடுத்து வைக்கும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும், இன்றைய தொழில் துறைக்கு தேவையான நவீன திறன்களை கற்றுணர்ந்து அவர்களது துறைகளில் வெற்றி பெற ஏதுவாக முதலமைச்சர் அவர்களால் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டம் “நான் முதல்வன்” திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம், கல்லூரி மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வாயிலாக Data Engineering, (டேட்டா இன்ஜினிரிங்) Genomic Mastery (ஜினோமிக் மாஸ்டரி), PCR Technology (பிசிஆர் தொழில்நுட்பம்), Plant Tissue Culture, Algal Technology, Graphic Design, ரோபோட்டிக்ஸ் (Robotics), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine Learning), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things), கிளவுட் கணினிமுறை அடிப்படைகள் (Cloud Computing), தொழில் 4.0. (Industry 4.0) சைபர் பாதுகாப்பு (Cyber Security), பெருந்தரவு ஆய்வு (Big Data Analytics), ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (Augmented Reality), விர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality), ஸ்மார்ட் எனர்ஜி கிரிட்(Smart Energy Grid), பிளாக்செயின் டெவலப்மன்ட் (Block Chain Development), நீடித்த கட்டுமான வடிவமைப்பு (Sustainable Building Design), மின்சார வாகனத்துறை (Electrical Vehicle) செயற்கை அறிவு தொழில் நுட்பத்தின் உன்னத வடிவமான Chat GPT, 5G தொழில்நுட்பம் போன்ற ¬¬¬¬¬ நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் தொடங்கப்பட்டு ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து “நான் முதல்வன்” திட்டம் சாதனை புரிந்துள்ளது.
இளைஞர்களிடம் வரவேற்பு!
மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள “நாம் முதல்வன்” திட்டத்தின் மூலம், 2022-–2023 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திறன் பயிற்சி முடித்தவர் களின் மொத்த எண்ணிக்கை 13,14,519 ஆகும். இவற்றுள் இறுதியாண்டு பொறியியல் பட்டப்படிப்பினை முடித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த 85,053 மாணவர்களில் 65,034 மாணவர்களும். இறுதியாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பினை முடித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த 99,230 மாணவர்களில் 83,223 மாணவர்களும் பணிநியமனம் பெற்றுள்ளனர்.
இவற்றுள் “நான் முதல்வன்” திட்டத்திற்கென்று பிரத்தியேகமாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் கலை அறிவியல் கல்லூரிகளில் 20,082 மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 5,844, என மொத்தம் 25,926 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
“நான் முதல்வன்” திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட தொழில்திறனை வெளிப்படுத்தும், தொழில் நுட்ப வடிவமைப்புகளை காட்சிப்படுத்தும் திறன் சாதனை கண்காட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தொழிற்கல்வி மாணவர்களின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு, பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக் கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று விரிவுபடுத்தப்பட்டது.
25 ஆயிரம் ரூபாய்
அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத்துறை நிர்வாகத்தில் மக்கள் சேவையில் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும், மாணவர்களின் படைப்பாற்றலையும் புத்தாக்க திறனையும் ஊக்குவிக்கும் வகையிலும் “நான் முதல்வன்” நிரலோட்ட இணைய தளம் (Hackathon) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று மாணவ சமுதாயத்தின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர், இளங்கலை தொழில் கல்வியை முன்னெடுத்து தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் காலணி உற்பத்தி தொழில்நுட்பம், ஆயத்த ஆடை உற்பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் இளங்கலை தொழிற்கல்வி (Bachelor of Vocation) என்ற ஒரு புதிய பட்டப்படிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, பல்துறை வித்தகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பல்துறை சாதனைகளை ஆவணப்படுத்தி நினைவு கூறும் விதமாக “கலைஞர் 100” இணையதளம் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர், ஒன்றிய அரசின் குடிமைப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பை அதிகரித்து வெற்றி பெறச் செய்யும் நோக்கிலும், இப்போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பொருளாதார ரீதியாக உள்ள தடைகளை நீக்கவும், குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக, தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இதில் விக்னேஷ் குமார் என்ற மாற்றுத்திறனாளிஇளைஞர் குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று ஊக்கத்தொகை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இவ்விழாவில், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பின் கீழ், திறன் பயிற்சி அளிக்க “நான் முதல்வன்” திட்டத்துடன் இணைந்து செயல்படும் பயிற்சி பங்குதாரர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், இளைஞர்களுக்கு சிறந்த திறன் பயிற்சி அளித்திடவும், தொழிற்சாலை திறன் பள்ளி பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையிலும், Tata Power Solar, Tata Electronics, Ernst & Young, TVS சப்ளை செயின் சொல்யூஷன்ஸ், வீல்ஸ் இந்தியா, Pinnacle Infotech, KGISL, Technosmile, Teamlease, Infonet comm, Wadhwani Foundation, Tamilnadu Academy of Construction ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, “நான் முதல்வன்” திட்டம் வாயிலாக பயிற்சி முடித்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களால் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பிற்கான பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தென்னிந்திய தொழிற்கூட்டமைப்பின் தலைவர் சங்கர் வானவராயர்
இவ்விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தரேஷ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, “நான் முதல்வன்” திட்ட முதன்மை செயல் அலுவலர் டாக்டர் எம்.ஜெயபிரகாசன், தென்னிந்திய தொழிற்கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். சங்கர் வானவராயர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

