இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
இளைஞர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, தமிழர் உரிமை காக்கும் பேராயுதமாக கழகத்தை உருவாக்கினார் பேரறிஞர் அண்ணா. அவர் காட்டிய வழியில் உடன்பிறப்புகளுக்குக் கொள்கை உணர்வூட்டி கழகத்தை வளர்த்தெடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவர்களின் நீட்சியாக, இயக்கத்திற்கான எதிர்காலம் குறித்த பெருங்கனவோடு, லட்சக்கணக்கான இளைஞர்களை அரசியல்மயப்படுத்திடும் பாசறையாக, நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இதே நாளில்தான் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது.
இத்தகைய வரலாற்றுப் பெருமைகள் நிறைந்த இளைஞர் அணியின் செயலாளராக அதன் பணிகளை ஒருங்கிணைப்பதில் பெருமை கொள்கிறேன்.
கலைஞர் நூற்றாண்டில் உள்ளோம், நமக்கான கழகப் பணிகள் காத்திருக்கின்றன.
உண்மையான புதிய இந்தியாவை விடியச் செய்ய, கழகத் தலைவரின் கரங்களுக்கு 2024- தேர்தல் வெற்றியைக் கொண்டு சேர்த்திடும் வகையில் அயராது உழைத்திட இந்நாளில் உறுதியேற்போம்

