தேசிய அளவில் பரபரப்பான அரசியல் சூழலில், நாடு முழுவதும் பாஜவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாட்னாவில் வரும் ஜூன் 12-ஆம் தேதி நடத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார். ஓரிரு விஷயங்களில் மாற்றுக் கருத்தை கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் இடையே இக்கூட்டம் ஒற்று மையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போட்டியிட வேண்டுமென்பது காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது. 2024 மக் களவை தேர்தல் எதிர்க்கட்சி களுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவும் உள்ளது.
இதனால், எதிர்க்கட்சிகளை இணைக்க காங்கிரஸ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் ஒருசில முரண்பாடுகள் தடுக்கின்றன. நாட்டின் மிகவும் பிரதான கட்சியான காங்கிரஸ், மாநில கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாஜவை வெல்ல முடியும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் ஒன்றிணைய பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கு தீர்வு கண்டு, தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார். பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பாஜக உடனான உறவை முறித்துக் கொண்டதில் இருந்தே, தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த நிதிஷ்குமார் தீவிரமாக உழைத்து வருகிறார்.
இதற்காக இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் மல்லி கார்ஜூனா கார்கே, ராகுல் உள்ளிட்டோரையும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மகாராட்டிரா முன்னாள் முதலமைச்சர்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரையும் நிதிஷ் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது, சோசியலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்ததைப் போல, பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை கூட்டத்தை நடத்தும் யோச னையை நிதிஷிடம் மம்தா தெரிவித்தார்.
அதன்படி, கருநாடகா தேர்தல் முடிந்த பிறகு பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க் கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், நிதிஷ்குமார் தலைமையில் அக்கட்சியின் உயர் மட்டக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் 12-ஆம் தேதி பாட்னாவில் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என நிதிஷ்குமார் தெரிவித்ததாக அவரது ஐக்கிய ஜனதா தள கட்சியினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாநில அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான விஜய்குமார் சவுத்ரி நேற்று (29.5.2023) அளித்த பேட்டியில், ‘‘பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படுவது கிட்டத் தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமான இக்கூட்டத்தில் பாஜக-வை எதிர்க்கும் பெரும்பா லான கட்சிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது. பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் 2024 மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிட்டால், பாஜக-வால் வெற்றி பெற முடியாது என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைவதற்கு நிதிஷ்குமார் கடுமையாக உழைக்கிறார். இந்த கூட்டணிக்காக நாங்கள் எந்த பெருமையையும் பெற விரும்பவில்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவை பெறுவதன் மூலம் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை நிஜமாகும்’’ என்றார்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகள் பிளவுபட்டு நிற்கும் நிலையில் பாட்னா சந்திப்பு தேசிய அளவில் முக்கிய சந்திப்பாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘அடுத்த மாதம் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மம்தா கலந்து கொள் வார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜவுக்கு எதிரான போராட்டத் தில் எதிர்க்கட்சிகளின் ஒற்று மையை உருவாக்குவது மற்றும் அதை வலுப்படுத்துவது குறித்த தனது யோசனைகளை அவர் முன்வைப்பார்’’ என தெரிவித்துள் ளார். சமீபத்தில் கருநாடகா தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்ற பிறகு, 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வலுவான இடங்களில் அக் கட்சியை ஆதரிக்க தயார் என மம்தா கூறியது குறிப்பிடத்தக்கது.
பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் 450 தொகுதிகளில் பொதுவான எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் நிதிஷ்குமாரின் முக்கிய யோசனை ஆகும். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்கள் போட்டியிட்டால், பாஜக பெரும்பான்மை வெற்றி பெறுவதை தடுத்து விட முடியும். இதன் மூலம் ஆட்சிக்கட்டிலில் இருந்து பாஜக-வை வெளியேற்ற முடியும் என்று நிதிஷ்குமார் உறுதியாக நம்புகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 38 சதவீத வாக்குகளையும், மீதமுள்ள 62 சதவீத வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகளும் பெற்றுள்ளன. எனவே, அதிக தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான யோசனையும் பாட்னா கூட்டத்தில் முன்வைக்கப்படும் என தெரிகிறது. ஓட்டுகள் சிதறாமல், இருக்க வேண்டும் என்பதில் நிதிஷ்குமார் உறுதியாக இருக்கிறார்.

