நான் முதல்வன் திட்டம் தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்ச மு. க. ஸ்டாலின் தலைமையில் விழாவானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்றது. இத்திட்டத்திற்காக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், சிறந்த நிறுவனங்களுக்கும் நினைவு பரிசுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் 100 – க்கான இணையத்தை தொடங்கி வைத்ததுடன், ‘நான் முதல்வன்’ கீதத்தையும் முதல்வர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் கூறியதாவது:
தமிழகத்தில் தொழில் தொடங்கினாலும் திறமையாக வேலை செய்பவர்கள் கிடைப்பது என்பது கடினமாக உள்ளது என்று தொழில் அதிபர்கள் கூறினார்கள். அதற்கான ஒரு வழிகாட்டி தான் ‘நான் முதல்வன்’ திட்டம். இத்திட்டமானது முதல்வரின் பிறந்த நாளான மார்ச் 1, 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் உதயநிதியையும் அவர் பாராட்டினார்.
ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற இலக்கு ஆனால் முதல் வருடத்திலேயே 13 லட்சம் பேர் உயர்திறன் பயிற்சியை இத்திட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இதில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது மிகப்பெரிய சாதனை.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள்:
445 பொறியியல் கல்லூரிகளில் இத்திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 85,053 பொறியியல் பட்டதாரிகளில், 65,034 நபர்களும் மேலும் 861 கலைக் கல்லூரிகளில் 99,230 மாணவர்களில் 83,223 நபர்களும் பயிற்சி பெற்று பணி நியமனத்தை பெற்றுள்ளனர்.
75 ஆயிரம் பேர் ‘கல்லூரி கனவு’ திட்டத்திலும் 2.50 லட்சம் பேர் ‘உயர்வுக்கு படி’ என்ற திட்டத்திலும் 25 லட்சம் பேர் ‘நான் முதல்வன்’ இணையதளத்திலும் பயன்பெற்றுள்ளனர்.
மேலும் அரசு ஏற்படுத்தும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவில் முதல்வருடன் அமைச்சர்களும், சென்னை மேயருமான பிரியா, மற்றும் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மேலும் பலர் கலந்து கொண்டனர்.
– தே.சுகன்யா

