மாநில உரிமைகளைக் காப்பதிலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முனைப்புடன் செயல்படுவதால் தி.மு.க.வை மோடியும் – பா.ஜ.க.வினரும் குறிவைக்கிறார்கள் என்று மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திருச்சி என்.சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கடும் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–
மணிப்பூர் விவகாரம் குறித்தும், டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் சட்டத்தை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பியது. மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு மிகுந்த அலட்சியத்துடன் நடந்து கொண்டது, நாட்டில் ஏற்படும் உயிர்சேதங்களுக்கு பதிலளிக்க வேண்டியது பிரதமரின் கடமை. மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் இல்லை!
அவை நிகழ்வுகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் தொடர்பாக பிரதமர் ஒரு அறிக்கை தர வேண்டும். நாங்கள் விவாதத்தில் வைத்திருக்கின்ற கருத்துக்களை, எங்கள் தரப்பில் இருக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் என்று சொன்னோம். ஆனால், பிரதமர் அவைக்கு வர மறுத்தார், மாறாக உள்துறை அமைச்சர வர வைக்கிறோம். நீங்கள் இரண்டரை மணி நேரம் குறுகிய கால விவாதம் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், நாங்கள் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை, காரணம் பிரதமர் என்பவர் இந்த நாட்டின் உட்சபட்ச பொறுப்பில் இருப்பவர், ஒரு பகுதியில் ஒரு உயிருக்குச் சேதம் என்றால்கூட பதற வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உண்டு.
பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் திறன் நம் முதல்வருக்கு உண்டு!
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி யுள்ளது. இது நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது. மாநில உரிமைகளைக் காப்பதிலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் முனைப்புடன் செயல்படுவதால் தி.மு.க.வை பிரதமரும் பா.ஜ.க. வினரும் குறிவைக்கின்றனர். இந்தியா என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒற்றுமையாகவும் வலிமையாகவும் உள்ளது. தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமாக அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் திறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியபோதுகூட சன்சத் தொலைக்காட்சி காட்டவில்லை. பிரதமர் மோடி பேசியபோது எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பை சன்சத் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்வது சரியா? தவறா? என்பதை மக்கள் முடிவு செய்துகொள்ளட்டும். மக்களவை, மாநிலங்களவையில் சட்டம் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டதாக வரலாற்றில் இல்லை.
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும்!
இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சிக்கு வரும். அப்போது ‘நீட்’ தேர்வு முடிவுக்கு வரும். ஜெயலலிதா விவகாரம் குறித்து ஒன்றும் அறியாமல் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதுதான் நிர்மலா சீதாராமன் அமைச்சராக இருக்கிறார் என்பதே தெரியவந்தது. மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை உரிமைக் குழுவுக்கு அனுப்புவதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்களுக்கு மேலாக பதட்டம் நிலவுகிறது. 150-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்கின்றனர். இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த 230 பேர் மியான்மர் காடுகளில் தவிக்கின்றனர்.
கவலைப்படாத பிரதமர்!
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டது பற்றி விளக்கம் அளிக்கவில்லை. மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி ஒரு நாளும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை கண்டு பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா அச்சம் அடைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறை வேற்றப்படுகின்றன. பல குற்றங்களுக்கு தண்டனைகள் குறைப்பு, 42 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. அரசு. எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அரசாக மட்டுமே பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. மணிப்பூர் கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் பிரதமர் மோடி செயல்படு கிறார். நாட்டின் பிரச்சினைகளை தீர்க்காமல், அலட்சியமாக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி.
பா.ஜ.க.வுக்கு அச்சம்!
உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்றுவந்தால் பிரச்சி்னை முடிந்துவிட்டதாக ஒன்றிய அரசு கூறு கிறது. இந்தியா கூட்டணி பெயரை கேட்டாலே பா.ஜ.க. அரசுக்கு கோபம் வருகிறது. நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல; மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதற்காகவே குரல் எழுப்பினோம். மாநில கட்சியான தி.மு.க. மீது நாடாளுமன்றத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் விமர்சனம் வைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அச்சம் இங்குதான் உள்ளது. தமிழ்நாட்டில் அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியாது என்பதை கடந்த காலத்தில் நிரூபித்துள்ளோம், வரும் தேர்தலிலும் நிரூபிப்போம்.
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்தார்.

