பெண்களிடம் அனுதாபத்தை உருவாக்கும் வகையில், அவையில் அப்போது அமைச்சராக இருந்த துரைமுருகன் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுத்ததாக ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்பப்பட்டது!
அந்த கால கட்டத்தில் அவையில் உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா உமாநாத், “துரைமுருகன் ஜெயலலிதாவின் புடவையை இழுத்தார் என்று பத்திரிகைகளில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது” என்று குறிப்பிட்டார். இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்கக் கூட்டத்திலேயே பாப்பா உமாநாத் பேசினார்.
“சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்து தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். சில பத்திரிகைகள் தவறான செய்திகளை போட்டு இருக்கின்றன. நான் சட்டசபையில் இருந்து நேரில் பார்த்ததை உங்களிடம் கூறுகின்றேன்” என அவை ஆரம்பித்ததிலிருந்தே நடந்த சம்பவங்களை விவரித்து விட்டு, தொடர்ந்து பேசியதாவது :- “முதல்வர் பட்ஜெட்டை படித்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கை முதல்வரின் கையிலிருந்த பட்ஜெட் மீது தாவியது. அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் புத்தகத்தை முதல்வரை நோக்கி வீச, அந்தப் புத்தகம் பட்டு முதல்வர் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியது.
பின்னர் அ.தி.மு.க.வினர் மைக்குகளைப் பிடுங்கி வீச, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அடிபட்டு இரத்தம் சொட்ட காணப்பட்டார். ஜெயலலிதா தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அவரது எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பாக நின்றனர். 10 நிமிடம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பின் ஜெயலலிதாவை அவரது எம்.எல்.ஏ.க்கள் அழைத்துச் சென்றனர். ஆனால், ஜெயலலிதா வெளியே சென்று, “அமைச்சர் துரைமுருகன் சேலையைப் பிடித்து இழுத்தார்; மானபங்கப்படுத்தினார் – என்றெல்லாம் கூறுவது அப்பட்டமான பொய். அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதா? நாங்கள் (கம்யூனிஸ்டு) பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள். அதுபோன்ற சம்பவம் நடந்து இருந்தால் பார்த்துக்கொண்டு இருப்போமா? ஜெயலலிதா – தான் ஒரு நடிகை என்பதை நிரூபித்துவிட்டார். தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கூறவில்லை. உண்மையைச் சொல்கிறேன். அமைச்சர் துரைமுருகன் அவரது சேலையை இழுக்கவும் இல்லை; அவரை மானபங்கப்படுத்தவும் இல்லை.”
– இவ்வாறு மயிலாடுதுறையில் மார்ச் 29-ந் தேதி மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாப்பாஉமாநாத், ஜனநாயக மாதர் சங்கக் கூட்டத்திலேயே பேசினார்.
இந்தத் தகவல்களெல்லாம் மொத்தமாக மறைக்கப்பட்டு – இன்றளவும் துரைமுருகன் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்தார் – என்ற வடிகட்டிய பொய்தானே வலம் வந்து கொண்டிருக்கிறது. உண்மைகளை மறைத்து – கழகத்தை களங்கப்படுத்த எப்படி எல்லாம் ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கவே இந்த விவகாரங்களை மீண்டும் விரிவாகத் தர வேண்டியுள்ளது.
– முரசொலி
சில நினைவலைகளிலிருந்து…

