டெஸ்ட் கிரிக்கெட், 50 ஒவர் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட் (ஐபிஎல்) என்று அடுத்தடுத்த நிலைகளுக்கு கிரிக்கெட் சென்று கொண்டிருக்கிறது. இப்போது உள்ளூர் போட்டியாக பிரபலமாகி இருக்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறைய இளம் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பயணத்தை தொடங்கும் களமாக இருந்து வருகிறது. அதில், இந்த சீஷனில் அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயர் அஜிதேஷ். யார் இவர் என்று கேட்காக கிரிக்கெட் ரசிகர்களே இல்லை. இந்த ஆல் ரவுண்டர் வரலாறு சற்று வித்தியசமானது.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர் யாரும் இல்லாமல் போனாலும் தமிழக வீரர்கள் பெருமளவில் இதர அணிகளில் விளையாடி வருகிறார்கள். ஐபிஎல் அணிகள் அடுத்து கொத்திக்கொண்டு போகும் தமிழக வீரர் – 20 வயது அஜிதேஷ். கோவை அணிக்கு எதிராக அவர் சதமடித்ததைக் கண்ட அனைவருக்கும் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.
அஜிதேஷ், இந்த வருடம் தான் சிறப்பாக விளையாடுகிறார் என எண்ண வேண்டாம். கடந்த வருடம் டிஎன்பிஎல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஜிதேஷ், 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். கிஷுரின் ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். சேலம் அணிக்கு எதிராக 150 ரன்கள் இலக்கை விரட்டும்போது 84/4 என இருந்த நெல்லை அணி கடைசியில் வெற்றி பெற பெரிதும் உதவினார். டிஎன்பிஎல் 2022 போட்டியில் 129 ரன்கள் எடுத்தார் அஜிதேஷ். ஸ்டிரைக் ரேட் – 243.39. 14 சிக்ஸர்கள் அடித்ததால் தமிழ்நாடு அணியிலும் இடம் பிடித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெங்களூர்வாசியான ஞானகுருசாமி, அஜிதேஷின் தந்தை. மூன்று, நான்கு வயதில் கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு இருந்ததால் ஏழு வயதில் கர்நாடகா இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்டார் அஜிதேஷ். அங்கு, பேட்டிங்கில் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் திறமையை அவர் வளர்த்துக் கொண்டார். எப்போதும் அதிரடியாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்ட அஜிதேஷ், ஓர் ஆட்டத்தில் 165 ரன்கள் எடுத்தபோது இவருடைய முழுத்திறமையைப் பலரும் அறிந்துகொண்டார்கள். பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 414 ரன்கள் எடுத்து 2-ம் இடம் பிடித்தார். இதையடுத்து கர்நாடகா யு-14 அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் கர்நாடகா அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழியை யோசிக்க வேண்டிய நிலைமை உருவானது.
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். தமிழ்நாட்டில் அஜிதேஷுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைப்பதால் கோயம்புத்தூருக்கு இடம் மாறினார் ஞானகுருசாமி. மகனின் கிரிக்கெட் திறமைக்காக எடுத்த இந்த முடிவு பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தது. கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இணைந்தார் அஜிதேஷ். டிஎன்பிஎல் போட்டியில் நெல்லை அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லை அணியின் பயிற்சியாளர் குருசாமியின் வழிகாட்டுதலில் திறமையை மேலும் மெருகேற்றிக்கொண்டார். சென்னை முதல் டிவிஷன் லீக் போட்டியில் குளோப் டிராட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் இணைந்தார். பல போட்டிகளில் முத்திரை பதித்ததால் கடந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான தமிழக அணியில் இடம்பிடித்தார். சட்டீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்தார். ஜார்கண்ட்டுக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கி 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.

டிஎன்பிஎல் 2023 போட்டியில் மதுரைக்கு எதிராக 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் எளிதாக வெற்றிக்கு சிறிய அளவில் பங்களித்தார். ஆனால் கோவைக்கு எதிரான ஆட்டம் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 181 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியின் இன்னிங்ஸில் கேப்டன் அருண் கார்த்திக் டக் அவுட் ஆனார். 3-வது நிலை வீரராகக் களமிறங்கிய அஜிதேஷ், கோவை ரசிகர்களால் மறக்க முடியாத ஓர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதலில் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அரை சதமெடுத்த பிறகு அதிரடியாக விளையாடி கோவை அணிக்கு அதிர்ச்சியளித்தார். 58 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார் அஜிதேஷ். சதமடித்தபோது அதைக் கூடப் பெரிய அளவில் கொண்டாடாமல் தன்னுடைய அணி வெற்றி பெறுவதில் தான் அவருடைய கவனம் இருந்தது. கடைசியில் நெல்லை அணிக்கு அபாரமான வெற்றி கிடைத்தது. ஐபிஎல் ஏலத்தில் அஜிதேஷ் தேர்வானால் அதற்கு இந்த ஆட்டம் முக்கியக் காரணமாக இருக்கும்.

