அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் 17 மணிநேர சோதனைக்கு பிறகு அவரை கைது செய்தனர். அதன் பின்னர், நெஞ்சுவலியால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. கோர்ட் விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று வர இருக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கட்டாயம் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

