இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம், மருத்துவமனை வீதி நகராட்சித் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து இன்று (27.04.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு உணவினை பரிமாறினார். ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா என கேட்டறிந்தார். இத்திட்டத்திற்கு பிறகு மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாக அப்பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.
தொடர்ந்து, அந்தப் பள்ளியில் வள வகுப்பறையின் செயல்பாட்டை பார்வையிட்டு, மாணவர்களுக்கு அளிக்கப்படும் கற்றல், கற்பித்தல் முறை, அளிக்கப்படும் பயிற்சிகள், அதற்கான அட்டவணைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, சிறப்புக்குழந்தைகள் – மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் தேவையை கண்டறிந்து அவர்களின் கற்றலை எளிமையாக்கும் வகையில் விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் Model Resource Room – Early Intervention Centre-யை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.அதனால் பள்ளி மாணவர்கள் குஷியானார்கள்.

