மொழியறியா பாகனில்
குச்சி பேசும் விந்தை செய்தோம்
வனமேறிய உடலை
மதிய சூட்டை கால்களில் தந்தோம்
வறண்ட நாவில்
சொம்பு நீரை தீர்த்தமாக்கினோம்
பத்து ரூபாய் ஆசிகளில்
நம்பிக்கை பெற்றோம்
ஊருக்குள் நடக்கையில்
ஓடு வீடுகளும் நிலை தடுமாறும்
ஓய்யார வீதியில்
காதுகளையளந்து கதை சொல்லும்
கோயில் வாயிலில்
மதங்களிட்டோம் “மதம்” பிடித்து
மண்டியிட்டும் கூக்குரலிடும்
அங்குசம் பேசும் சத்தியங்களில்
வனத்தை அடகு வைத்தோம்
மானுட கூட்டிற்கு வந்ததும்
வனக்கூடு இதயமிழந்த கதை
காது வளர்த்த பாட்டி கதைகள்
வெற்றிலையில் புதைத்து வைக்கும்
மழை வெயில் பட்டுத்தெறிக்க
கலையாத உடலை கட்டழகாய்
நீண்ட கையால் நீடு துயிலை
சரிசெய்யும் காற்றுக்குழல்..
பிளிறும் குரலில்
வனங்கள் தலையசைக்கும்
ஆண்டின் நாளெல்லாம் நகர்வலம்தான்
மீதியிருக்கும் நிமிடமெல்லாம்
கூர்க்காவப்போல காவல் செய்யும் தொழிலாளிதான்
சுதந்திரப்பிடி மறுத்து கட்டளையால்
காட்சிகளில் மடியும்
கால்களின் ஒரங்களில்
வருடங்கள் கணக்குகள் செய்திருக்கும்
கண்களினூடே சிதைவிடத்து
வெளிச்சப் பரல்களை
பட்டுப் பாடூன்றும் களிறாய்
பார்த்தவிடங்களிலாம் பரவசம் செய்யும்
மொழிக் கூட்டைக் கற்றப் பாகன்
இதயக்கூட்டைக் கற்க மறந்த கதை
கோவில்களில் வலம் வருகிறது
ஒற்றை அங்குசம்!
#யானைகள் #தினம் #இன்று !
– வீரசோழன் க.சோ. திருமாவளவன்

