லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை, ‘ஆதிராஜன்’ கதை – திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி இருக்கிறார். இது, இசைஞானி இளையராஜாவின் 1417 வது படம்.
சூப்பர் ஹிட்டான “வழி நெடுக காட்டுமல்லி..” என்ற பாடலை எழுதிப் பாடிய இளையராஜா இதுவரை சுமார் 200 பாடல்களை எழுதியிருக்கிறார். தற்போது இந்த படத்திற்காக “இதயமே…. இதயமே… இதயமே…” என்ற பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடினார். அவருடன் சேர்ந்து ஸ்ரீஷா பகவதுல்லா பாடியிருக்கிறார்.
இளையராஜா இசையில் பல பாடல்களை பாடி இருந்தாலும் இளையராஜா எழுதிய பாடலை யுவன் பாடி இருப்பது இதுவே முதல் முறை. மேலும், “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற பாடலை பழநிபாரதி எழுத கார்த்திக் பாடியிருக்கிறார். “வண்ண வரைகோள்கள்….” பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார்.
“வழிநெடுக காட்டுமல்லி” பாடலை இளையராஜாவுடன் சேர்ந்து பாடி பிரபலமான பெங்களூர் பாடகி அனன்யா பட், “வச்சேன் நான் முரட்டு ஆசை…” “அழகான இசை ஒன்று…” ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார். இந்த மூன்று பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கின்றார்.

நடனக் காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர். பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது. அஜித்தின் “துணிவு” படப் பாடலை வெளியிட்ட ஜீ மியூசிக் தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை வெளியிட இருக்கிறது. விரைவில் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார்.
’’சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியதை விட ‘’நினைவெல்லாம் நீயடா” திரைப்படம் புதிய அனுபவத்தை தந்தது. இந்தப் படம், அனைத்துப் பிரிவினராலும் பேசப்படும் என்று உற்சாகமாகக் கூறினார் இயக்குநர் ஆதி ராஜன்.

