இந்தியாவிலேயே அதிகபட்ச தினசரிக் கூலி கேரளா முதலிடம்!
வெவ்வேறு மாநிலங்களில் தொழிலாளிகளுக்கு அளிக்கப்படும் தினக்கூலி குறித்த விவரங்களை இந்தியத் தொழிலாளர் ஏடு (Indian Labour Journal) மூலம் பெற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இவ்விவரங்களின் படி, தேசத்திலேயே அதிகமான தினசரி கூலியை தொழிலாளர்களுக்கு தரும் மாநிலமாக கேரளா உள்ளது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ 726.80 கூலியும், விவசாயம் அல்லாத தொழிலாளர்களுக்கு ரூ 681.80, உற்பத்தித்துறை தொழிலாளர்களுக்கு ரூ 737.70 என்பதை கேரளா உறுதிபடுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ 217.80, குஜராத்தில் ரூ 220.30 மட்டுமே வழங்கப்படுகின்றன. தேசத்திலேயே மிகக்குறைவான கூலியை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கும் மாநிலங்களாக மத்தியப் பிரதேசமும், குஜராத்தும் உள்ளன.
ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையே ரூ 524.60, ரூ 445.60ம் வழங்கி 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. அதேபோல் உற்பத்தித் துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ 519.80, ரூ 478.60ம் வழங்கி 2வது மற்றும் 3வது இடங்களில் ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதன் மூலம் செல்வங்களை ஓரளவிற்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கும் (Fair Distribution of Wealth) மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

