மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை:
தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை சீர்குலைக்கும் வகையில் பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்து காலதாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில், அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந்தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் செயலற்ற தன்மையை உருவாக்குதல்,
மேற்காணும் முக்கிய காரணங்களை முன்பே சிந்தித்து, தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டித்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (Federation of Students Organisation – Tamil Nadu) சார்பில் வரும் 16.06.2023 அன்று, காலை 09.00 மணியளவில் சென்னை, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO – TN) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பட்டமளிப்பு விழாவிற்கு தேதி தராமல் லட்சகணக்கான மாணவர்கள் வாழ்வில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி -யைக் கண்டித்து 09.06.2023 அன்று நான் அறிக்கை கொடுத்திருந்தேன். இந்நிலையில் மாணவர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முன்வந்து இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணியும் மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளது.
கழக மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஒருங்கிணைப்பில் சென்னை மண்டல மாணவர் அணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்வதோடு, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட கழகத் தோழர்களும் மாணவர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து கழக கொடியுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆளுநரை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க.வின் அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம். கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பிற்கு (Federation of Students Organisation – Tamil Nadu) எனது வாழ்த்துகள்!

