இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தமது 102வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். வாழும் வரலாறாகத் திகழும் தோழர் சங்கரய்யாவுக்கு நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட தமிழக மக்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ திரு. சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளில், ‘’இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஆட்சிமொழிகள் (திருத்த) சட்டம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் 1968 ஜனவரி 23-ஆம் நாள் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தோழர் என்.சங்கரய்யா பேசியதிலிருந்து’’ வாசகர்களுக்கு தருகிறோம்.
தமிழும் மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழி
’’யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் தேர்வுகள் எழுதுகிறவர்கள் இந்திய தேசிய மொழிகளான 14 மொழிகளிலும் எழுதலாம் என்று சேர்த்துக்கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும். இந்தியா பூராவிலும் உள்ள மக்கள் அந்த உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் மட்டும் தான் அல்லது இந்தியிலே மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையைப் பறிப்பதாகும்.
இன்று இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து நாம் நடத்திக் கொண்டிருக்கிற ஒரு இயக்கம், இந்தி மொழி பேசாத மாநில மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் ஓர் உறுதியான அடிப்படையிலே நம்முடைய திட்டம் இருக்க வேண்டுமென்று நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இன்று இந்தியாவிலுள்ள 14 மொழிகளும் மத்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளாக வேண்டும். தமிழும் மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள அப்பகுதியை நான் மனப்பூர்வமாகவும், உறுதியாகவும் வரவேற்கிறேன் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கருத்து நாடு முழுவதிலும் ஒன்றாகத் தான் இருக்கிறது. தமிழகத்து நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒரு கருத்து, வேறு ஒரு மாநிலத்தில் இருக்கிற நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒரு கருத்து என்ற நிலையிலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல்லை. அதைத்தான் இந்தியா பூராவிலும் உள்ள எங்களுடைய கட்சித்தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். அதன்படிதான் இன்று தமிழ்நாட்டில் இதை நாங்கள் வற்புறுத்துகிறோம்.
யுபிஎஸ்சி தேர்வு தாய்மொழியில் எழுத வேண்டும்
இதை வற்புறுத்துகிற நேரத்திலே யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குத் தேர்வு எழுதுகிறவர் கள், மத்திய அரசாங்கத்திற்கு வேலைக்குப் போக வேண்டுமென்று பரீட்சை எழுதுகிறவர்கள், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய மொழிகளிலே ஏதாவது ஒன்றிலே பாண்டித்தியம் பெற்றிருக்கவேண்டும் என்று நாடாளு மன்றத்திலே நிறைவேற்றப்பட்டிருக்கிற தீர்மானத்தை கவனிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வெறும் அவர்களுடைய தாய்மொழியை மட்டும் படித்தால் போதும் என்ற நிலைமை இருக்கிறது. இது மிகவும் மோசமான, மிகவும் பாரபட்சமான, மிகவும் சீர்கேடு வாய்ந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருக்கிற திருத்தத் தீர்மானத்திலே யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் தேர்வுகள் எழுது கிறவர்கள் இந்திய தேசிய மொழிகளான 14 மொழிகளி லும் எழுதலாம் என்று சேர்த்துக்கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும். இந்தியா பூராவிலும் உள்ள மக்கள் அந்த உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் மட்டும் தான் அல்லது இந்தியிலே மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையைப் பறிப்பதாகும். இந்த அரசினர் தீர்மானத்தின் 4,5,6 பகுதிகளைப் பொறுத்தவரை எங்களுடைய கட்சிக்கு முழு சம்மதம் இருக்கிறது. அதற்கு முழு ஆதரவு கொடுக்கிறது. இரண்டாவது பகுதியிலே குறிப்பிட்டிருக்கிற அந்தப் பகுதிகளிலும் எங்களுக்கு ஒரு திருத்தம் இருக்கிறது. அதாவது இன்று நாமே சொல்லுகிறோம் தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் மூச்சு என்று. டாக்டர் ஹண்டே அவர்கள் சென்ற கூட்டத் தொடரில் ஆங்கிலமே கல்லூரிகளில் போதனா மொழியாக நீடிக்க வேண்டு மென்று பேசும்போது சொன்னார்கள். அரசாங்கமும் அதற்கு ஆதரவு அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப் பட்டது. நம்முடைய மாணவர்கள் இன்று தமிழின் மூல மாகத்தான் உயர முடியுமென்ற அளவு, போதனா மொழியாக, பயிற்சி மொழியாக தமிழ் வர வேண்டும்.
வேறு மொழி கற்கச் சொல்ல உரிமையில்லை
மும்மொழித்திட்டம் நிச்சயமாகத் தேவை இல்லை. தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களை தமிழைத் தவிர வேறு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. மற்றவர்களுக்கும் உரிமை கிடையாது. ஏனென்றால் அது அவர்களுடைய தாய்மொழிஇல்லை. அதேபோல் ஆந்திராவிலுள்ள மாணவர்களை தெலுங்கைத் தவிர வேறு ஏதாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்வது நியாயம் அல்ல. ஆக, தாய்மொழியைத் தவிர, வேறு அண்மை மாநில மொழியைக்கூட நாம் கற்றுக்கொள்ளச் சொல்ல உரிமை இல்லை என்று சொல்லும் போது 6 ஆயிரம் மைல் தூரத்திலுள்ள ஆங்கில மொழியை நம்முடைய மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டுமென்று நாம் ஏன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? இன்று அதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நம்முடைய மாநிலத்தில் தமிழைத் தவிர மற்ற மொழிகளைப் படிப்பதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விட்டுவிடவேண்டும். இதற்கு நம்முடைய மாநில அரசாங்கமும் கல்வி இலாக்காவும் எந்த அளவுக்கு ஏற்பாடு செய்துதர முடியுமோ அந்த அள விற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அவரவர் தாய்மொழி யைத் தவிர வேறு ஏதாவது ஒரு மொழியைப் படிக்கலாம் என்று தான் சொல்லவேண்டுமே தவிர , ஆங்கிலம் தான் படிக்கவேண்டுமென்றோ ,இந்திதான் படிக்க வேண்டுமென்றோ சொல்லக்கூடாது. ஆங்கிலத்தை கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏன் மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டும். அவர்கள் மீது ஏன் அனாவசியப் பளுவை சுமத்த வேண்டுமென்பதை மிகவும் பணி வன்போடு உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன். ஆகவே இந்த மூன்று அம்சங்களிலும் இந்த அரசினர் கொண்டு வந்திருக்கக்கூடிய தீர்மானத்தில் தக்க திருத்தங்கள் ஏற்படுமானால் எங்களுடைய கட்சி அதை பூரணமாக ஆதரிப்பதற்கு இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லாவற்றையுமே தமிழிலேயே நடத்த முடியும்
தாய்மொழியை, சீக்கிரமாகவே ஐந்து ஆண்டுக ளுக்குள் எல்லாத் துறைகளிலும் உபயோகப்படுத்த வேண்டும். நம்முடைய அரசாங்கத்திலும் சரி, நீதி மன்றத்திலும் சரி, கல்வியின் எல்லாமட்டங்களிலும் சரி, தமிழைக் கொண்டு வருவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியை எதிர்ப்பதற்கு ஆங்கிலம் வேண்டும் என்று சொல்கிறார்கள் சிலர், ஆங்கிலத்தை எடுத்து விட்டால் ஒரு சூன்யம் ஏற்பட்டுவிடும். அந்த சூன்யம் ஏற்படாமல் இருப்பதற்கு ஆங்கிலத்தை வைத்துக் கொள்ளலாம் என்று வாதாடுகிறார்கள். ஆங்கிலம் இருந்தால் இந்தியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று நினைப்பது தவறு.
தமிழகத்தில் எவ்விதமான சூன்யமும் இல்லை. தமிழ் மாநிலத்தில் எல்லாவற்றையுமே தமிழிலேயே நடத்த முடியும். சட்டமன்றத்திலும், நீதிமன்றங்களிலும், கல்வியின் எல்லா மட்டங்களிலும் தமிழைக் கொண்டுவர முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. வேறு எந்த மொழியும் வருவதற்கு அவசியமில்லை. ஆங்கிலமும் தேவையில்லை. நமது நிலை வேறு. தமிழ்நாட்டின் எவ்வளவு சீக்கிரம் நீதி, நிர்வாகம், கல்லூரி போதனா மொழி இவைகள் எல்லாவற்றிற் கும் தமிழைக் கொண்டு வருகிறோமோ அந்த அள வுக்கு இதர மொழிகளுடைய தாக்குதல் நம்மீது ஏற்படாது’’

