spot_img
More
    முகப்புசெய்திகள்’’தமிழக பெண்களிடம் ஆந்திர போலீஸ் பாலியல் வல்லுறவு..!’’ நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

    ’’தமிழக பெண்களிடம் ஆந்திர போலீஸ் பாலியல் வல்லுறவு..!’’ நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

    ’’தமிழக பெண்களை பாலியல் வல்லுற வுக்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கி ஆந்திர மாநில காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 9 குறவர் இன மக்களை கடந்த 11.06.2023 அன்று இரவு ஆந்திரா சித்தூர் காவல்துறையினர் கடத்திச் சென்று ஒருவார காலமாக அடைத்து வைத்து அடித்து, இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து, பெண்களின் மர்ம உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி, இரும்புக் கம்பியால் கொடூரமாக குத்தி சித்திரவதை செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்துறையினரின் இந்த சட்டவிரோத, கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    சித்தூர் காவல்துறை – ஐந்து நாட்களாக லாக்கப்:

    கடந்த சில ஆண்டு காலமாக திருடு என்ற பெயரில் எது எங்கு நடந்தாலும் குறவர் இன மக்கள் தான் திருடியிருப்பார்கள் என்று வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை ஆந்திரா, தமிழ்நாடு மாநில காவல்துறையினர் மிக மோசமான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 11.6.2023ந் தேதியன்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 35) என்பவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்துறையினர் வந்துள்ளனர்.

    எதற்காக இரவு நேரத்திலேயே அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்ட பிரியா என்கிற அருணா (வயது 27) கண்ணம்மாள் (வயது 65), ஸ்ரீதர் (வயது 7) ஆகியோரையும் அடித்து வண்டியில் கடத்திச் சென்றுள்ளனர். இதனை அறிந்த ஐயப்பனின் சகோதரி சத்யா (வயது 40) என்பவர் ஜூன் 12ந் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலமாக புகார் செய்துள்ளார். இந்த செய்தியை அறிந்த ஆந்திர காவல்துறையினர் புகார் செய்த சத்யா, கணவர் ரமேஷ் (வயது 55), மருமகள் பூமதி (வயது 24) ஆகியோரையும் அதே சித்தூர் காவல்துறையினர் இரவோடு, இரவாக கடத்திச் சென்று கூடகலப்பட்டு கிரைம் காவல் நிலையத்தில் அனைவரையும் ஐந்து நாட்களாக லாக்கப்பிலேயே அடைத்து வைத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை:

    இச்சம்பவம் அறிந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் பி. டில்லிபாபு மற்றும் குறவன் பழங்குடியின சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், வழக்கறிஞர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊத்தங்கரை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவர்களை மீட்க வலியுறுத்தியதின் அடிப்படையில் அழைத்துச் சென்ற 7 பேர்களில் மூன்று பெண்கள் ஒரு சிறுவன், ரமேஷ் ஆகியோரை மட்டும் சித்தூர் காவல்துறையினர் கிருஷ்ணகிரி மத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஐயப்பன் மற்றும் பூமதி ஆகியோரை விடுவிக்கவில்லை.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட பிரியா என்கிற அருணா, சத்யா, கண்ணம்மாள், ரேணுகா ஆகியோரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள், குறவர் பழங்குடி சங்கத் தலைவர்கள் நேரில் சென்று விசாரித்த போது, இப்பெண்கள் சித்தூர் காவல்நிலைய காவலர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள் என்றும், எங்களுடைய மர்ம உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி சித்தரவதை செய்தார்கள் என்றும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீரும், கபலையுமாக தெரிவித்துள்ளனர். உடனே இவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வரப்படுகிறது. ஆந்திர மாநில காவல்துறையினரின் இந்த சட்டவிரோத காட்டுமிராண்டித்தனமான அராஜக நடவடிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

    பாலியல் வல்லுறவு – சித்தரவதை :

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்களை பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டு, கொடுமையான சித்தரவதை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலம், சித்தூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் ஆந்திர மாநில அரசுடனும், காவல்துறையுடனும் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி குற்றமிழைத்த காவலர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு, சித்தரவதைக்குள்ளாக்குதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்று தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    மேலும், பாலியல் வல்லுறவுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி, உடலாலும், மனதாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு தீருதவி நிவாரணமாக தலா ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments