தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை:
இந்தியாவின் சட்ட ஆணையமானது பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து கேட்புக்கு ஜுன் 14 அன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. முப்பது நாட்களுக்குள் அது பற்றிய கருத்துக்களை அதற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கெடு விடுத்தள்ளது. ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தும் வேலையில் சட்ட ஆணையம் இறங்கியிருப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.
பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷமீரின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவது என்பதே ஆர்எஸ்எஸ்சின் திட்டமாகும். அதில் முதல் இரண்டை முடித்துவிட்டவர்கள், இப்போது மூன்றாவதையும் செயல்படுத்த துணிந்திருக்கிறார்கள். இதற்காகத்தான் சட்ட ஆணையத்தை தங்களது மோடி அரசின் மூலம் தூண்டியிருக்கிறார்கள்.
இதற்கு முந்தைய சட்ட ஆணையம் இது பற்றி மக்களின் கருத்து கேட்டு, தனது முடிவை 2018-ல் தந்திருக்கிறது என்பதை தற்போதய அறிவிக்கை ஒப்புக்கொள்கிறது. அந்த முடிவு, “பொது சிவில் சட்டம் அவசியமானதும் அல்ல, தற்போதய சூழலில் விரும்பத்தக்கதும் அல்ல” என்பதுதான். அதைச் சொல்லாமல் அது வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மீண்டும் மக்களிடம் கருத்து கேட்கிறோம் என்கிறது தற்போதய சட்ட ஆணையம்.
இது போன்ற அடிப்படையான விஷயங்களில் சில ஆண்டுகளிலேயே நிலைமை நிச்சயம் மாறாது. ஆனாலும் ஆணையம் மீண்டும் விஷயத்தை கிளப்புவது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜக அரசின் இழிசெயலுக்கு துணை போவதே என்பதை சுட்டிக் காட்டுகிறது மேடை.
இந்துச் சட்டத்தில் முற்போக்கான திருத்தங்களை அண்ணல் அம்பேத்கரும், பிரதமர் நேருவும் 1950-களில் முன்மொழிந்த போது அவற்றை கடுமையாக எதிர்த்தது ஆர்எஸ்எஸ். இப்போது பொது சிவில் சட்டம் என்று இவர்கள் கிளம்புவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களது தனி சட்டங்களை பறிக்கும் வேலையே. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களின் சட்ட அங்கீகாரத்தையும் ரத்து செய்து புரோகித திருமண முறையை அனைவர் மீதும் திணிக்கிற காரியமுமாகும்.
இந்தக் கருத்துக் கேட்கும் அறிவிக்கை தேன்கூட்டைக் கலைக்கிற செயல். இதை உடனடியாக சட்ட ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் ஒற்றுமை மேடை வலியறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

