spot_img
More
    முகப்புசெய்திகள்'’12 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் 454 பேருக்கு பணி நிரந்தரம்..!’’ வேல்முருகன்

    ‘’12 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் 454 பேருக்கு பணி நிரந்தரம்..!’’ வேல்முருகன்

    ’’12 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் 454 பேருக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்’’ என்று தமிழக வாழ்வுரிகைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை:
    ’’கால்நடைப் பராமரிப்புத்துறையில் கடந்த 2012ஆம் ஆண்டில் ஏராளமான உதவி மருத்துவர் பணிகள் காலியாக இருந்ததாலும், கால்நடை உதவி மருத்துவர்களின் சேவை உடனடியாக தேவைப்பட்டதாலும், 843 உதவி மருத்துவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அவர்களின் பணி அமர்த்தல் தற்காலிகமானது என்று அறிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்குரிய காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், கால்நடை உதவி மருத்துவர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட உயர்நீதிமன்றம், அவர்கள் பொதுப்போட்டித் தேர்வு எழுதி தான் பணி நிரந்தரம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கால்நடை உதவி மருத்துவர்கள் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

    அதே நேரத்தில், அவர்களுக்கு வயது வரம்பில் சலுகையும், அவர்களுக்கு பணி அனுபவத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 5 மதிப்பெண் வீதம் அதிக அளவாக 50 மதிப்பெண் கருணை மதிப்பெண்களும் வழங்கி, டி.என்.பி.எஸ்.சி நடத்தும் பொதுப்போட்டித் தேர்வில் வென்று பணி நிரந்தரம் பெறலாம் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி அவர்கள் கடந்த மார்ச் 15ஆம் தேதி தேர்வு எழுதியுள்ளனர்.

    12 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 843 பேரில் இப்போது 454 பேர் மட்டுமே நீடிக்கின்றனர். ஆனாலும், 40 வயதைக் கடந்து விட்ட அவர்களால், இப்போதுதான் படித்து முடித்து விட்டு தேர்வு எழுத வரும் இளம் பட்டதாரிகளுடன் போட்டியிட முடியாது.

    கால்நடை உதவி மருத்துவர் பணியில் தொடரும் அவர்களால், பணியையும் கவனித்துக் கொண்டு, போட்டித் தேர்வுக்கும் தயாராக இயலாது. தற்காலிக மருத்துவர்களாக பணியாற்றி வருபவர்கள் படித்த போது நடைமுறையில் இருந்த பாடத் திட்டத்திற்கும், இப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் பாடத் திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    மேற்குறிப்பிட்ட அனைத்தும் தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களுக்கு எதிராக உள்ள நிலையில், அவர்களை இளம் பட்டதாரிகளுடன் போட்டித்தேர்வில் போட்டியிடச் செய்வது பொருத்தமானதாக இருக்காது; அது சமூகநீதிக்கு எதிரானது.
    தற்காலிக கால்நடை மருத்துவர்கள் அனைவருக்கும் தேவைக்கும் அதிகமான கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளது. தற்போது 40 வயதை கடந்து விட்ட அவர்களால், வேறு எந்த பணிக்கும் செல்ல முடியாது.

    இதன் காரணமாக, தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில், கால்நடை உதவி மருத்துவர்கள் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்று, 454 கால்நடை உதவி மருத்துவர்களையும், பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments