கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தாலும் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் கடந்த 5 நாட்களாக அக்கட்சியில் இழுபறி நீடித்தது.
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் போட்டி இருந்தது. இருவரும் பிடிவாதமாக இருந்ததால், கட்சி மேலிடம் திணறியது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது சித்தராமையா முதலமைச்சராக இருக்க அவர் கூறியதாக தகவல் வெளியானது. டெல்லியில் இன்று காலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் வீட்டில் இருவரும் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். அதற்கு பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர். இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பெங்களூருவிலும், அவரது சொந்த ஊரான மைசூரு மாவட்டம் சித்தராமய்யனகுந்தியிலும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள், அவரது உருவப்படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும், இனிப்பு ஊட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இலாகா ஒதுக்கப்படும் என்று சிவக்குமார் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தது ஏன்?
இந்நிலையில் சிவக்குமார் தனது முகநூல் பக்கத்தில், ‘’கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் கன்னடர்களின் வளர்ச்சியே நமது முக்கிய முன்னுரிமை. அதை உறுதி செய்வதில் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம். கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே நமது முதன்மை முன்னுரிமை, அதற்கு உத்திரவாதம் அளிக்க நாம் ஒன்றுபட்டுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

