ஆனைமங்கலம் செப்பேடுகளை விரைவில் தமிழ்நாடு கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்தார்.
பிரதமரின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 134-வது நிகழ்ச்சியை, சென்னை கோயம்பேட்டில் பொதுமக்களோடு இணைந்து அமைச்சர் (31 மே 2026) கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அண்மையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றிருந்தபோது, சோழர் காலத்து சிறப்பு வாய்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டன. அவை விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், இன்றைய வானொலி நிகழ்ச்சியில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக நலப்பணிகளைப் பிரதமர் மக்களிடையே கொண்டுசேர்த்ததை அமைச்சர் மேற்கோள் காட்டினார்.
“அண்மையில் நமது 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்கள் குரிந்தர்வீர் சிங் மற்றும் அனிமேஷ் குஜூர் ஆகியோரின் மகத்தான சாதனையை பிரதமர் பாராட்டியதுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர்களுடனும் உரையாடினார். இதேபோல், நாகர்கோவிலைச் சேர்ந்த கிரிஜா அம்மா அவர்களைத் தாம் அண்மையில் சந்தித்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்த 40 லட்சம் ரூபாயைப் பிரதமரிடம் நன்கொடையாக வழங்கியதையும் அவர் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுபோன்று நாடெங்கிலும் பல்வேறு எளிய மக்கள் மேற்கொள்ளும் அளப்பரிய சமூக சேவைப் பணிகளைப் பிரதமர் தமது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் நாடறியச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்று கூறிய அமைச்சர், இதன் மூலம் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற இது வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

