ஐஐடி மெட்ராஸ்-ன் என்பிடிஇஎல்-கேட் தளம் (NPTEL-GATE Portal) கேட் தேர்வுக்கான பாடத்தயாரிப்புகளை இலவசமாக வழங்குகிறது. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் கேட் (GATE 2024) தேர்வை பொறியியல் பட்டதாரிகள் எழுதுகின்றனர். கேட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் இந்த பாடக்குறிப்புகளை தயாரித்து வெளியிட்டுள்ளது. கேட் தேர்வில் வெற்றி பெறுவோர், பட்ட மேற்படிப்பு, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) என்பிடிஇஎல்-கேட் தளம் (gate.nptel.ac.in) – இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சிபெற விரும்புவோருக்கு முக்கிய இணையைத்தளமாக உருவெடுத்துள்ளது.
என்பிடிஇஎல்-கேட் இணையத்தளத்தில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற கேட் தேர்வின் கேள்வித்தாள்கள், முந்தைய ஆண்டுகளில் அதாவது கடந்த 2007 முதல் 2022-ம் ஆண்டு வரை இடம்பெற்ற கேள்விகளை இந்தத்தளம் வழங்குகிறது.
பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) என்பது பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கட்டிடக்கலை, மானுடவியல் (Humanities) என பல்வேறு இளங்கலைப் பாடங்களில் விரிவான புரிதலுக்கான விண்ணப்பதாரர்களை மதிப்பிடும் தேசிய அளவில் மதிப்புவாய்ந்த தேர்வாகும். கேட் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், நிதி உதவியுடன் கூடிய முதுகலை மற்றும் நேரடி முனைவர் பட்டத்திற்கான பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பெல், ஒ.என்.ஜி.சி, சி.பி.சி.எல், பவர் கிரிட், என்.எல்.சி போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முடியும்.
’’இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 7 முதல் 10 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வை எழுதுகின்றனர். 2023-ம் ஆண்டில், ஏறத்தாழ 7 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர், இதில் ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் வெற்றிகரமாகத் தகுதி பெற்றனர்.
மின்சாரப் பொறியியல், இயந்திரப் பொறியியல், கட்டிடப் பொறியியல், மின்னணு மற்றும் தொலைத்தொர்பு, இயற்பியல், வேதியியல் ஆகிய 6 முக்கிய பாடங்களில் 115 மாதிரித் தேர்வுகளை கடந்த ஆகஸ்ட் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். கடந்த 2023, அக்டோபர் 15 தொடங்கிய தற்போதைய செமஸ்டரில் முந்தைய 6 தேர்வுகளுடன் உயிரிப் பொறியியல் உள்பட 7 பாடங்களில் மொத்தம் 19 மாதிரித் தேர்வுகளை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர்.
521 முதல் கட்ட அமர்வுகளில் 3,975 மாணவர்களும், 367 இரண்டாம் கட்ட அமர்வுகளில் 3,321 மாணவர்களும் பங்கேற்றனர். மூன்றாம் கட்ட நேரலை அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன’’ என்று ஐஐடி மெட்ராஸ் அறிவித்துள்ளது.

