கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கை:
“தொலைநோக்குப் பார்வையுடனும் திட்டமிடலுடனும் பொருளாதாரக் கொள்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை. ஏழாண்டுகளுக்குள் மீண்டும் ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது இதை தெளிவாக்குகிறது. பணமதிப்பு நீக்கம், தொற்றுநோய் போன்ற நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையை அழிப்பதே ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை”.
ஒன்றிய அரசு பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படுத்துகையில், கேரளத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக வர்த்தகத் துறையை கேரள அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தொழில்களுக்கு கேரளம் உகந்ததல்ல என்று சில உள்நோக்கம் கொண்டவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இது கேரளாவுக்கு எதிரான பிரச்சாரம்.
கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு புழக்கத்தில் இருந்த 85 சதவிகித ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது. இப்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக 11 சதவிகித ரூபாய் நோட்டுகள் மறைந்துள்ளன. நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது. இது வர்த்தகம் மற்றும் தொழில் துறையை மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
கறுப்புப் பணம், ஊழல் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுக்க என்ற பெயரில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூபாய் நோட்டுத் தடை அறிவிக்கப்பட்டது. ஆனால் இவை எதுவும் உண்மையாகவில்லை.
வர்த்தகர்கள் பொருளாதாரத்தின் முது கெலும்பு. ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையால் வணிகத் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை அறிவியல் பூர்வமாக அமல்படுத்தாதது வணிகர்களையும் மோசமாக பாதித்துள்ளது. நிலைத்தன்மையை குறிக்கோளாக கொண்ட தொழில்துறை மற்றும் வணிக நட்புச் சூழல் கேரளத்தில் உள்ளது.
நாட்டின் பொதுத்துறைகள் மூடப்படும் நிலையில், இங்கு அவற்றை மாநில அரசு கையகப்படுத்துகிறது. உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் கேரளாவுக்கு வரு கின்றன. கதவடைப்பும் ஆட்குறைப்பும் இல்லாத வேலைக் கலாச்சாரம் இங்கு வளர்ந்து வருகிறது.
கேரளா தொழில் தொடங்க ஏற்ற இடம். தொழில்முனைவோர் ஆண்டு மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய சிறு, குறு நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்டன. இதை யெல்லாம், பொய் பிரச்சாரம் செய்வோர் கண்டுகொள்வதில்லை.
தொழில் துறையில் நிலைத்தன்மையே அரசின் குறிக்கோள். மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்கள் காலத்துக்கேற்ப நவீனமயமாக்கப்படும். முதலீட்டை அதிகரிக்கவும், நிலையான வணிகச் சூழலை உருவாக்கவும், தொழில் முனைவோரை வளர்ப்பதையும் இடது ஜனநாயக முன்னணி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

