மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல அலுவலகம், கொடைக்கானலில் மூன்று நாள் புகைப்படக் கண்காட்சியை நடத்துகின்றது.

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் 9 ஆண்டு சாதனை, சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை (உலக சுற்றுச்சூழல் தினம்) ஆகிய மையக்கருத்துக்களில் இந்த ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகைப்படக் கண்காட்சி கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறுகின்றது.
இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினர் திலிப் திறந்து வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசிய அவர், யோகாவை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி ஐ நா பொதுச் சபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஆண்டு தோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்க வழிவகை ஏற்பட்டது. உலக மக்களை ஒரே குடும்பமாக கருதி, எல்லோரும் எல்லா நலமும் பெற வேண்டும் என்ற ஒப்பற்ற நோக்கில், சர்வ ரோக நிவாரணியான யோகக் கலையை இந்தியா உலகிற்கு பெருங்கொடையாக வழங்கியுள்ளது. அதனடிப்படையில் நாம் இன்று இந்த சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றோம்.

தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு யோகா பெரிதும் உதவுகிறது. குறிப்பாக மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் யோகாவைப் பயின்று அன்றாட வாழ்வில் கடைபிடித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்கள் அறிந்து கொண்டு பயன் பெறுவதோடு பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். ஆரோக்கியமான, விழிப்புணர்வு மிகுந்த,வளமான சமுதாயம் மூலமே நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என திலிப் வலியுறுத்தினார்.
முன்னதாக சர்வதேச யோகா தினம், லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் (உலக சுற்றுச்சூழல் தினம்) குறித்த விழிப்புணர்வு கையேடுகளை அவர் வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டம் சார்பில் தயாரிக்கப்பட்ட எடை குறைந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துமிக்க ஜாம்-ஐ பயனாளிகளுக்கு திலிப் விநியோகித்தார்.
நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல இயக்குநர் ஜெ.காமராஜ் தலைமையுரை ஆற்றினார்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநர் அ.ராஜம், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கு.மரியதாஸ் வாழ்த்துரை வழங்கினர்.
மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் கே.ஆனந்த பிரபு வரவேற்புரை ஆற்றினார்.
கண்காட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து அரங்கு, இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் திருத்த அரங்கு, சமூக நலத்துறை அரங்கு, தோட்டக்கலைத் துறை அரங்கு, சுற்றுலாத் துறை அரங்கு ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் எம். முரளி மற்றும் கள விளம்பர உதவி அலுவலர் ஜெ. போஸ்வெல் ஆசீர் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் அன்றாட வாழ்வியல் முறையில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரும் எளிய யோகா செய்முறை விளக்கங்கள் நிகழ்த்தப்பட்டது.

