பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
’தென்னாட்டு ஜான்சி ராணி’ என அண்ணல் காந்தியடிகளால் வியந்து பாராட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சென்னை மாகாண சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கடலூர் அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலையைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைத்தார்.
’’தமிழ்நாட்டுப் பெண்களின் வீரத்துக்கும் துணிச்சலுக்கும், இந்திய விடுதலைப் போரில் அவர்கள் ஆற்றிய பங்குக்கும் அடையாளமாக விளங்கும் அஞ்சலை அம்மாளின் தியாக வாழ்வைப் பெருமையோடு போற்றுவோம்’’என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வானதிசீனிவாசன் (கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்) அறிக்கையில், ‘’ சுதந்திர போராட்ட வீராங்கனை மு.அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு திருவுருவச் சிலையை திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
சட்டமன்றத்தில் இதுகுறித்து நான் வைத்த கோரிக்கையில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு கடலூரில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவா் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரையும் தமிழக அரசு சூட்ட வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் அவரது குடும்பத்தினருக்கு சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அவர்களுக்கு உதவி தொகை கிடைப்பதற்கான வழி வகை செய்யவேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.


