முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.8.2023 மதுரையில், பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, சால்வை அணிவித்து, முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையையும் வழங்கி சிறப்பித்தார்.
மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன், ’திருப்பதி விலாஸ்’ என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரன் அவர்களை முதலமைச்சர் அவர்கள் பாராட்டி, அவரது சமூகப் நலப் பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார். மதுரை மாமனிதன் என்று போற்றப்படும் ராஜேந்திரன் அவர்களை மதுரை மக்கள் மட்டுமல்ல இப்போது தமிழ்நாடே பாராட்டி வருகிறது. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அவர் எப்போதும் போல தனது வியாபாரத்தையும் சமுகப்பணியையும் செய்து கொண்டே இருக்கிறார். மெட்ராஸ் முரசு சார்பில் அவரை வாழ்த்துகிறோம்.

