பிரதமராக மோடி பொறுப்பேற்று 9 ஆண்டு முடிந்ததை முன்னிட்டு மக்கள் சந்திப்பு இயக்கம், தமிழக பாஜக சார்பில் நடத்தப்படுகிறது. அதில், மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்த மாநில தலைவர் அண்ணாமலை மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான மடத்திற்கு சென்றார்.
இதுகுறித்து அண்ணாமலை ‘’தமிழையும் சைவத்தையும் போற்றி வளர்த்த திருஞானசம்பந்தரால், 1500 ஆண்டுகளுக்கு முன்பாகப் புதுப்பிக்கப்பட்ட தொன்மையான மதுரை ஆதீன மடத்திற்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. பல நூறு ஆண்டுகளாகத் தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் காப்பதில், ஆதீனங்களின் பங்கு இன்றியமையாதது.

புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு செங்கோல் வழங்கிச் சிறப்பித்தவர்களுள் ஒருவரான அருள்மிகு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றேன். சுவாமிகளுடன் மதிய உணவு அருந்தும் பாக்கியமும் பெற்றேன்’’ என்றார். ஆதினத்தை சந்தித்த படங்களை அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

