தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளர் (SI) பணிக் காலியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 615 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
மொத்த காலிப்பணியிடங்களில், 20% இடங்கள்(எண்ணிக்கை- 123) பணியில் இருக்கும் காவலர்களுக்கும், 10% இடங்கள்( எண்ணிக்கை – 49) காவல்துறை வாரிசுகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், 10% இடங்கள் (எண்ணிக்கை – 49) விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்கள், தலைமைக் காவலர்கள் 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதேபோன்று, 10% வாரிசு இடஒதுக்கீட்டின் கீழ் பணியிலுள்ள, ஓய்வு பெற்ற மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2023 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது. அதிகபட்சம் பொதுப் போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்களுக்கு 47 வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.
இந்த தேர்வை எழுதுவோருக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசின் நிறுவனமான, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இப்போட்டித் தேர்விற்கான இலவச இணையதள வகுப்புகளை 10.5.2023 அன்று முதல் தொடங்க இருக்கிறது.
இந்தத் தேர்விற்கான பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் தகுதித் தேர்வு (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்), பொது அறிவு (விஞ்ஞானம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய அரசியல், தற்கால நிகழ்வுகள்), உளவியல் (தருக்கப் பகுப்பாய்வு, எண் பகுப்பாய்வு, தகவல்தொடர்புத் திறன், செய்திகளைக் கையாளும் திறன், அறிவாற்றல் திறன்) என்று அனைத்துப் பிரிவுகளிலும் பாடங்கள் கற்பிக்கப்படும்.
‘சாகசம் 60’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளப் பயிற்சியில் மொத்தம் 180 பயிற்சிக் காணொலிகள் 60 நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும். இடையிடையே சுமார் 20 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.
மாதிரித் தேர்வுகளை நடத்துவதற்கென்றே இந்தக் கல்லூரி ‘நோக்கம்’ (Nokkam) என்று பெயரிடப்பட்டுள்ள மென்செயலி ஒன்றைத் தயாரித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வினை எழுதிய உடனேயே தங்களது மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் சரியான பதில்களுக்கான விளக்கங்களும் அங்கு கொடுக்கப்படும். பதிவேற்றம் செய்யப்படும் காணொலிகளையும் இந்தச் செயலியின் மூலம் மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம். பாடக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி ப்ளேஸ்டோரில் கிடைக்கும்.

