ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது 2023 மே 20-ம் தேதியன்று பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியைச் சந்தித்தார்.
உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி அவரிடம் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தன்னைப் பொறுத்த வரை இது அரசியல் பிரச்சனையோ, பொருளாதார பிரச்சினையோ அல்ல எனவும், மாறாக மனிதநேயம், மனித விழுமியங்கள் பற்றிய பிரச்சினை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் உக்ரைனின் ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, அந்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு நடத்த உக்ரேனிய கல்வி நிறுவனங்கள் எடுத்த முடிவை வரவேற்றார்.

போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த நிலையை சீர் செய்ய இந்தியாவும், தானும் தனிப்பட்ட முறையில் அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி அவரிடம் கூறினார்.
உக்ரைன் மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மோடி கூறினார். உக்ரைனின் தற்போதைய நிலைமை குறித்து அதிபர் செலென்ஸ்கி பிரதமருக்கு விளக்கினார். இரு தரப்பினரும் தொடர்ந்து தகவல்களைப் பரிமாரிக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.

