ஆவினில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பால் கொள்முதல் 1 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதாகவும், அதை உயர்த்த வேண்டும் என்று ஆவின் பொது மேலாளர்களுக்கு, ஆவின் மேலாண்மை இயக்குனர் வினித் கடிதம் எழுதி இருப்பதாக செய்தி பார்க்க முடிந்தது.
பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் லிட்டருக்கு தலா ’ரூபாய் 30 முதல் 33’ வரை என்ற விலையில் பால் கொள்முதல் செய்வதுதான் இதற்கு காரணம். ஆவின் இதற்கு மேல் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. எனவேதான், ஆவின் கொள்முதல் டல் அடிக்கிறது.
இப்போது கிராமங்களில் தனியார் பால் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் மையங்களை அமைத்துள்ளார்கள். அந்த மையத்தில் Milk Analyzer கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கருவி மூலமாக மிகத் துல்லிய அளவில் பாலை கொள்முதல் செய்கிறார்கள். கொள்முதல் செய்யப்படும் பாலின் சாம்பிள் எடுத்து அந்தக் கருவியில் போடுகிறார்கள். அந்த பாலில் உள்ள தரத்தைப் பொறுத்து அதற்கான விலையை Milk Analyzer கருவியே நிர்ணயம் செய்து, எத்தனை லிட்டர் பால்? எவ்வளவு விலை என்று பிரிண்ட் அவுட் தந்து விடுகிறது.
மேலும், இந்தக் கருவி பால் பண்ணைக்கு நேரடியாக இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதால், இங்கே கொள்முதல் செய்யப்படும் விபரம் உடனுக்குடன் அவர்களுக்கு கணினியில் அப்டேட் ஆகிவிடுகிறது. இதற்கான பணமும் ஒவ்வொரு வாரமும் பால் உற்பத்தியாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

பாலின் தரத்தைப் பொறுத்து லிட்டர் பால், 35 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை கொள்முதல் செய்கிறார்கள். இது பால் மாடு வைத்துள்ளவர்களுக்கு லாபகரமாக இருப்பதை வெளிப்படையாக சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. எனவே தான் ஆவின் கொள்முதல் டல் அடிக்கிறது என்பது ஊரறிந்த விஷயம். இந்த பிரச்னையை சரிகட்ட ஆவின் எடுக்கப்போகும் நடவடிக்கையை பொறுத்துதான் ஆவினுக்கு பால் ஊற்றுவார்களா? என்பது தெளிவாகும்.
மாட்டுக்கார வேலன் படத்தில் சத்தியம் நீயே பாடலில் “தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு.. என்ற வரிகள் உண்டு. அதை தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் உண்மை என்று நிரூபித்து உள்ளது.
ஆம், 2 மாடுகள் வளர்த்து, பராமரித்து, பால் கறப்பது கஷ்டம் தான். ஆனால் அதை கஷ்டப்பட்டு செய்தால் அந்த வருவாயில் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றி கொள்ள முடியும்.
ஆவின் நிர்வாகத்தில் மெத்தப்படித்த நிர்வாகிகள் பலர் இருக்கிறார்கள். ஆவின் பொருட்கள் விற்பனையை அதிகரித்தால், விரிவுப்படுத்தினால் ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கலாம். அதாவது பால், நெய் விற்பனையைத் தாண்டி ஆவின் செயல்பட வேண்டும். அமுல் நிறுவனம் இங்கே வரக்கூடாது என்று சொல்வதை விட, அந்த நிறுவனம் போல் செயல்பட நாம் முயற்சி எடுப்போம். பால் கொள்முதல் விலையை அதிகரிப்போம். பால் கொள்முதலை அதிகரிப்போம்.
– ஆ.கோமதிநாயகம் விசு

