’’திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் கட்டணம் 15 ரூபாய். தற்பொழுது எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுவதால் 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை 15 ரூபாயக மாற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவிற்கு திருநெல்வேலி வருகை தந்துள்ள மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.,க்களின் கனிவான கவனத்திற்கு!!
நெல்லையை சேர்ந்த கலைவாணி (தனியார் நிறுவன ஊழியர்): கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களின் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டு, தற்போது அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் “பயணிகள்” ரயில்களின் நம்பர்கள் மாற்றப்பட்டு “எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் இயக்கப்படுகிறது. கட்டணமும் எக்ஸ்பிரஸ் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக கொரோனா காலத்திற்கு முன் திருநெல்வேலி – திருச்செந்தூர் மார்க்கத்தில் 56761 என்ற எண்ணுடன் இயக்கப்பட்டு வந்த “பயணிகள் ரயில்” தற்போது 06674 என்ற எண்ணுடன் எக்ஸ்பிரஸ் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.
கொரோனா காலத்திற்கு முன் திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் கட்டணம் 15 ரூபாய். தற்பொழுது எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுவதால் 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை உடனே குறைக்க வேண்டும்’’.
ஸ்ரீவைகுண்டம் தாமோதரன் (விவசாயி) : ’’கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டது என்றார்கள். தற்போது உலகமே சகஜ நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணங்கள் இன்னும் குறைக்கப்படவில்லை.
முன்பு இருந்த திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் கட்டணம் 15 ரூபாய் என்பது மிகக் குறைவு தான். ரூ 40 என உயர்த்தி வசூலிக்கப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளார்கள். என்னைப்போன்ற விவசாயிகள், கூலி வேலைக்கு நெல்லை வந்து செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.
சென்னையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் வழக்கம்போல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு மாநிலத்தின் பிற பகுதிகளில் இயக்கப்படும் பயணிகள் ரயிலிலும் கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் இருந்த கட்ணத்தை வசூலிக்க வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’.

தீபா தேவகி (திருச்செந்தூர்): ‘’ நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில் பெயரை மாற்றி கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர். ரயில்வே அதிகாரிகள் இந்த பிரச்னையில் மவுனம் சாதிக்கின்றனர். பயணிகள் சார்பில் பல தடவை கோரிக்கை வைத்துவிட்டோம். பல்வேறு அமைப்புகள் சார்பிலும் புகார் சொல்லி வருகிறார்கள். ஆனால், நெல்லை பகுதியை சேர்ந்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்களோ?
இனியாவது, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் வந்துவிட்டது என்று கொண்டாடுகிறார்கள். அது பணக்காரர்கள் ரயில். அந்தக் கட்டணம் எங்களுக்கு சரிபட்டு வருமா? தூத்துக்குடி டூ சென்னை விமான கட்டணம் போல உள்ளது. எங்களைப் போன்ற அன்றாடம் காய்ச்சிகளுக்கு வந்தே பாரத் ரயிலால் என்ன பயன்? மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் இந்த நெல்லை – திருச்செந்தூர் ரயில் கட்டணத்தை ஏற்கனவே இருந்தது போல மாற்ற வேண்டும். அதாவது முன்பு ஒரு தடவை சென்று வர ரூ.30 தேவை. ஆனால், இப்போது ரூ.80 ஆகிறது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இது எங்களின் நியாயமான கோரிக்கை.’’
திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் அடித்தட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அதிகரிக்கப்பட்ட கட்டணம் குறைக்கபடுமா?
– ஆ.கோமதிநாயகம் விசு

