கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை கவர்னர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை. கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார்.
அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் கவர்னர் ரவி. கவர்னர் அண்மைக்காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். சிதம்பரம் விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் கவர்னர் இப்படி பேசியிருப்பார் என கருதுகிறேன்
முதலமைச்சர் மீதான விமர்சனம் பிரதமர் மீதான விமர்சனமாக பார்க்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். சர்ச்சைகளுக்கு கவர்னர் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கவர்னர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார்.
2021-22 ம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் 4,79,213 நிறுவனங்கள், 36,63,938 பணியாளர்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 2022-23-ல் நிறுவனங்கள் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய கவர்னர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார் என தெரியவில்லை.
அகில இந்திய அளவில் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் உள்ள டாப் 100 பல்கலைக்கழகங்களில், 20 பல்கலை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவை; டாப் 100 கல்லூரிகளில், 30 தமிழ்நாட்டில் இருப்பவை.
முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன.
தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது. உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

