‘’தி கேரள ஸ்டோரி’’ திரைப்படத்திற்கு எதிராக மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தியது.
கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தின் டிரெய்லர் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை சுதிப்தோ சென் எழுதி இயக்கியுள்ளார்.
வருகிற 5-ந் தேதி இந்த படம் வெளியாகும் நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியது.
இந்த நிலையில், தி கேரள ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தியுள்ளது. அவர்களும் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர்.
ஆனாலும், திட்டமிட்டப்படி இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக கேரளா திரைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

